ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு
திருநெல்வேலி, ஆக.26- கடையநல்லூர் இக்பால்நகர் அருகில் ரயிலில் அடிபட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தென்காசி கடையநல்லூர் ரயில்வே சாலையிலுள்ள மாவடிக்கால் ரயிவே கேட் அருகில் ரயில் தண்டவாளத்தில் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில்பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து தலை நசுங்கி இறந்து கிடந்தார். இவர் யார் என்பது தெரியவில்லை. உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .கடையநல்லூர் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி
திருநெல்வேலி,ஆக.26- தேசிய கண் தான இருவார விழாவை முன்னிட்டு நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும்பெருந்திரளானோர் கலந்து கொண்ட மாபெரும் கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடை பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை தேசிய கண் தான இருவார விழா வாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார் , டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர். டி.லயனல் ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் அன்புராஜன், செயலாளர் டாக்டர் சுப்பிரமணியன் மற்றும் டாக்டர் பிரான்சிஸ் ராய், டாக்டர் ஆதம் அலி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கண் தானத்தின் அவசியத்தையும், கருவிழி மாற்று சிகிச்சைக்கு காத்திருப்போர் பட்டியலையும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.லயனல் ராஜ் புள்ளி விபரமாக எடுத்துரைத்தார். மனித சங்கிலியில் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலை பள்ளி,கல்லூரி,ரோஸ்மேரி கலைக்கல்லூரி, பார்வையற்றோர் பள்ளி, புனித ஜோசப் பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் மற்றும் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி, ஆக.26- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.16,38,266/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் திங்களன்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும் போது: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து 1500 கன அடி நீர் கடந்த 21ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அனைக்கு வருகிற 29ம் தேதி தண்ணீர் வந்து சேரும். அதன் பின்னர் அங்கிருந்து 4 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். குடிமராமத்து பணிகளின் கீழ் குளங்கள் தூர்வாறும் பணி 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வருகிற 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும். கடம்பாகுளத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. ஆத்தூர் குளத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றார். அதனைத்தொடர்ந்து, மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.16,38,266/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.