சார்.. சார்... மூன்று நான்கு மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.
என்ன ஆச்சு.. ஒவ்வொருத்தரா கேளுங்க..
மத்த மாவட்டத்துல மழை பெய்யுது.. தேர்வு ரத்தாம்.. நமக்கும் இருக்காதா..?
மூக்கு புடைப்பா இருந்தா இப்புடித்தான் கேக்கத் தோணும்.. - மற்ற மாணவர்கள்.
தேர்வு ஏன் ரத்தாகணும்?
ஹேய்.. நோஸ் கட்.. -கேலிக்குரல்கள் எழுந்தன.
நோஸ் கட்னா என்ன?
மூக்கறுக்குறது சார்.. போன வாரம் அந்த மூணுபேரும் சேந்து எனக்கு குடுத்தாங்க..
அவமானப்படுத்துறது சார்..
உண்மைதான்.. இது இன்னிக்கு நேத்து இல்ல. அரசர்கள் காலத்துலயே இருந்துச்சு..
ஒருத்தருக்கொருத்தர் மூக்குறுத்துக்குவாங்களா..
அப்படியில்ல.. முன்னாடி மைசூர் ராஜாவுக்கு மதுரை மேல ஒரு கண்ணு இருந்துச்சு. திருமலை நாயக்கர் இருநதப்ப படையெடுத்து வந்தாங்க. ஆனா, அடிச்ச அடில ஓடிப் போயிட்டாங்க.. திருமலை நாயக்கருக்கு உடல் நிலை சரியில்லைன்ன உடனே மறுபடியும் வந்தாங்க.
அவரால எதுத்து சண்டை போட முடியலையா சார்..
ஆமா.. இதுதான் சாக்குனு வீரர்கள்கிட்ட எதிரிகளோட மூக்கை வெட்டிக் கொண்டு வந்தா பரிசுனு சொல்லிட்டார். அதுவும் மீசை இருக்குற மாதிரி மேலுதடையும் சேத்து கொண்டு வந்தா கூடுதல் பரிசாம்..
தோத்தவங்க எல்லாம் மூக்கைப் பொத்திட்டு ஓடுனாங்களா..?
ஆமா... ஆனா அவங்க விடல.. மூக்கை அறுக்குறதுல மும்முரமா இருந்தாங்க. அப்பதான் ராமநாதபுரம் சேதுபதிய திருமலை நாயக்கர் சண்டை போடச் சொன்னாரு. 60 ஆயிரம் வீரர்கள் திரண்டாங்க. மைசூர் வரைக்கும் அந்தப் படைகளை விரட்டுனாங்க.. அவங்களோட மூக்கை அறுத்துக் கொண்டு வந்தாங்க..
மூக்கறுப்புப் போரா, சார்..
சரியாச் சொன்ன. இதுக்குப் பெயரே மூக்கறுப்புப் போர்தான். War of the Nosesனு ஆங்கிலத்துல சொல்வாங்க.
மூக்கு இல்லாம பாவம்.. கஷ்டப்பட்டுருப்பாங்க.
சீனாவுல ஒருத்தரு அப்புடித்தான் கஷ்டப்பட்டாரு. ஆனா தொடைல இருந்து சதைய எடுத்து, மூக்கு செஞ்சு, நெத்தில தலைகீழ மாட்டிட்டாங்க..
குளிக்குறப்ப தண்ணி உள்ள போயிறாதா சார்..
எனக்கும் அதே சந்தேகம்தான்.. - ஆசிரியர்.
சார் எனக்கொரு சந்தேகம்.. எங்க தலைமுறை புத்திசாலின்னு ஒரு தடவ சொன்னீங்க... ஆனா இன்னிக்கு ஒரு விளம்பரம் டி.வி.ல பாத்தேன். அதுல பொண்ணு தக்காளி சட்டினிய டிரஸ்ல கொட்டிக்கும்.. புது டிரஸ் வேணும்னு அம்மாகிட்ட கேக்கும்... அம்மாவும் வாங்கித் தரேன்னு சொல்வாங்க.. ஆனா அந்தப்பக்கம் போயிட்டு, அம்மா அளவுக்கு புத்திசாலி இல்லேனு சொல்ற மாதிரி விளம்பரம் போகும்.. சோப் பவுடர் போட்டா புது டிரஸ் மாதிரி ஆயிருமாம்..
மாணவி ஒருவர் குறுக்கே புகுந்தார். விளம்பரம்லாம் பாரபட்சமாவும் இருக்கு சார்..
எப்புடி சொல்ற?
இந்த விளம்பரத்த நானும் பாத்தேன். வர்ற மூணு பேரும் பொண்ணுங்களா இருக்கு.. இன்னொரு விளம்பரத்துல ஒரு பையன் சகதி தெறிச்ச சட்டையப் போட்டுட்டு, சோப் பவுடர் பையோட வருவான். பவுடர் விலைல பவுச்சானு ஆச்சரியமா பாத்துட்டு அம்மா, பையனத் தூக்கிக் கொஞ்சிப் பாராட்டுவாங்க..
ஆமா... இந்த மாதிரி பாரபட்சம் இன்னும் தொடருது..
இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார்னு அரசிங்களே இருந்துருக்காங்க..
ஜான்சி ராணியும்தான சார்..
அவங்க ராணிதான்.. ஆனா ஆட்சிப் பொறுப்புல இருந்தாங்களான்னு வரலாற்றுப் பதிவுகள் தெளிவா இல்ல. ஒரு பெண் ஆட்சியாளரா மாறுறதுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்குறது அவ்வளவு சாதாணர விஷயமில்ல. கணவர் இறந்தபிறகு, தத்துப்பிள்ளை தாமோதர் ராவை அரசரா வெச்சுக்கிட்டுதான் உரிமை கோருனாங்க.
தானே ஆட்சியாளரா ஆகியிருந்தாங்கன்னா, பெண்கள் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்களுக்கு நோஸ் கட் குடுத்த மாதிரி இருந்துருக்குமே சார்..
Better late than Never.. எப்போதுமே இல்லைனு இருக்காம, தாமதமா இருந்தாலும் பரவாயில்ல. விடாம போராடிட்டே இருக்கணும்..
ஆமா சார்.. செய்தித்தாள்ல வாச்சாத்தினு ஒரு ஊர்ல நடந்த கொடுமைக்கு 31 வருஷம் கழிச்சு நீதி கிடைச்சதுன்னு போட்டுருந்துச்சு...