யூனியன் பேங்க் ஆப் இந்தியா பெண் அதிகாரிகளுக்கு இழைத்துள்ள அநீதி இது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
நூற்றுக் கணக்கான பெண் அதிகாரிகளை மாற்றல் என்ற பெயரில் தொலை தூர மையங்களுக்கு பந்தாடியுள்ளது யூனியன் வங்கி நிர்வாகம்.
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை துறை சுற்றறிக்கை எண் 4/9/1/2014/ IR GOI/MoF/DFS/ 08.08.2014 பெண் அதிகாரிகள்/ஊழியர்கள் இட மாற்றல், பணியிடம் குறித்து தெளிவான வழிகாட்டல்களை தந்துள்ளது. அவர்களின் விருப்பம், பெற்றோர்/ இணையர் இருப்பிடங்கள் ஆகியன பொருத்து பணியிடங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் யூனியன் வங்கி நிர்வாகம் இந்த வழி காட்டல்களை அப்பட்டமாக மீறி உள்ளது. இம்மாற்றல்களில் வங்கி நலனும் கருத்தில் கொள்ளப்படவில்லை. சீரான அணுகுமுறையும் இல்லை. இது அதிகாரிகள் மத்தியில் பெரும் மனச் சோர்வை உருவாக்கி உள்ளதென அறிகிறேன்.
இந்த உத்தரவுகளை திரும்பப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி வங்கி தலைவர் திருமிகு ஏ.மணிமேகலை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.