tamilnadu

img

வேலை நிறுத்தத்தின் நியாயத்திற்கு இது சாட்சியம்! எல்.ஐ.சி வழங்கும் நிதியாதாரம் - அதிகம் பெரும் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடம் : சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சரின் பதில்

சு. வெங்கடேசன் எம் பி எழுப்பிய கேள்விக்கு  (6030/28.03.2022) நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 

மாநில அரசின் பத்திரங்களில் மட்டும் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடுகள் 9.66 லட்சம் கோடிகள்.  இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் எல்.ஐ.சி யின் நிதியாதார திரட்டல் கிடைத்திருப்பதை அமைச்சரின் பட்டியல் தெரிவிக்கிறது. 
டிசம்பர் 31, 2021 வரையிலான மாநில அரசு பத்திர முதலீடுகளில் தமிழ்நாடுக்கு ரூ 1,04,009 கோடிகள் கிடைத்திருக்கின்றன. அதிக முதலீடுகள் பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், தமிழகத்தை விட ரூ 440 கோடி மட்டுமே கூடுதல் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம் 92,000 கோடி, தெலுங்கானா 91000 கோடி, மகாராஷ்டிரா 76000 கோடி, உத்தரப் பிரதேசம் 58000 கோடி, கேரளா 55000 கோடி என்ற அளவில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மிகப் பெரும் நிதி நெருக்கடிகளுக்கு மாநில அரசுகள் ஆளாகி வரும் நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் நிலுவையாக உள்ள சூழலில் எல்.ஐ.சி யின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தேச நிர்மாணத்தில், சமச்சீரான வளர்ச்சியை ஓரளவு உறுதி செய்வதில் எல்.ஐ.சி யின் பங்கு மிக மிக முக்கியமானது. 
இவ்வளவு பெரிய அளவிலான நிதியாதாரங்களை வழங்குகிற எல்.ஐ.சி யின் பங்கு விற்பனைக்கு ஒன்றிய அரசு முயற்சிப்பதுதான் முரண்பாடு. 

ஏற்கெனவே எல்.ஐ.சியின் பங்கு விற்பனைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சட்டிஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் ஆகியோர் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கேரள சட்டமன்றத்தில் எல்.ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது மாநில நிதியாதாரங்கள் மீதான தாக்குதல். கூட்டாட்சி மீதான தாக்குதல்.

இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கும் எதிரானது. அதன் நியாயத்திற்கு அமைச்சரின் பதில் ஒரு சாட்சியம். 

ஒன்றிய அரசே, நாடு தழுவிய தொழிலாளர் சங்கமத்தின் உரத்த குரலாவது உனது காதுகளில் கேட்கிறதா?