“அந்தக் கோயிலில் கடவுள் இல்லை”
துறவி உரைத்தார் அழுத்தமாக.
அரசனோ ஆத்திரமுற்றான் வெகுவாக.
“கடவுள் இல்லையோ? துறவியே!
நீரென்ன கடவுள் மறுப்பாளரைப் போல் பேசுகின்றீரே?
விலைமதிப்பற்ற ரத்தினங்கள்
பதித்த அரியணையில்
அதோ ஒளிர்கிறதே பொற்சிலை!
அதைக் கண்டுமா சொல்கிறீர்
அங்கு ஒன்றுமேயிமில்லையென?”
“ஒன்றுமேயில்லாமல் இல்லை.
நிரம்பிப் போய்தானுள்ளது முழுக்கவே
அரச ஆணவத்தால்.
அரசனே! அக்கோயிலில்
உலகின் கடவுளை அல்ல
உனையேதான் நீ அருளிக் கொண்டாய்”
சுட்டிக்காட்டினார் துறவி.
“இருபது இலட்சம் பொற்காசுகளைக் கொட்டி, நான்
கட்டி எழுப்பிய பிரம்மாண்டக் கோயில்
முட்டி நிற்கிறது விண்ணை.
நெறியான சடங்கனைத்தும்
முறையாக நிறைவேற்றிய பின்னே
அர்ப்பணித்தேன் கடவுளர்க்கு இதனை.
இருப்பினும் சாற்றுகின்றீர்,
இத்தகு பிரம்மாண்ட கோயிலுள்
கடவுளின் இருப்பு இல்லையே என.
எத்தகு துணிச்சல் துறவியே உமக்கு!”
சினங்கொண்டு சீறினான் அரசன்.
வினயமுடன் பதிலிறுத்தார் துறவி,
“இருபது இலட்சம் மக்கள்
உன்னுடைய குடிகள்
கொடும் பஞ்சத்தால் தாக்குண்டனரே
அந்த ஆண்டில்,
ஏதிலிகளாய் நின்ற அவரெல்லாம்
உண்ண உணவும் ஒண்ட நிழலுமற்று
உன் உதவி வேண்டிக் கதறி
வந்தனர் உன் வாசல் தேடி.
தேடி வந்தோரைத் துரத்தினாய்.
துரத்தப்பட்டவர் கதியற்று
காட்டிலும் குகையிலும்
வீதியோர மரத்தடியிலும்
பாழடைந்த பழங்கோயிலிலும்
புகுந்தனர் புகலிடம் நாடி.
அதே அந்த ஆண்டில்
இருபது இலட்சம் பொன்னைக் கொட்டி
உன் மாபெருங் கோயிலைக் கட்டினாய் நீ.
அன்று அதே நாளிலேதான் கடவுள் பகன்றார் வெகு தீர்க்கமாக,
“நான் என்றென்றும் தங்கும் என்னுடைய இல்லம்
அணையா விளக்குகளால் ஒளிபெற்றுப் பொலிகிறது
நீலவானின் நடுவில்.
உண்மை அமைதி கருணை அன்பெனும்
உயர்பெறுமதியின் அடித்தளம் அமைய
கட்டப்பட்டது என் வீடு.
வீடிழந்து நின்ற தன் குடிகளுக்கே
ஒண்ட சிறுநிழலும் தர இயலா
இல்லாமையில் உழலும்
ஓர் அற்பக் கருமி,
எனக்கொரு வீட்டைத் தந்துவிட முடியுமென
மனப்பால் குடிக்கிறானோ அவன்?” என்று கேட்ட அன்றேதான்
கடவுள் வெளியேறினார்
உன்னுடைய அந்தக் கோயிலை விட்டு.
வெளியேறிச் சேர்ந்து கொண்டார்
வீதியோர மரத்தடிகளில் வசிக்கும் ஏழைகளோடு.
பெருங்கடல் அலை நுரைகளில்
நிரம்பியிருக்கும் வெற்றிடமே போல
உள்ளீடற்றதே உன்னுடைய
இவ்வுலகின் இக்கோயிலும்.
செல்வமென்ற வெறும் நீர்க்குமிழிதான் அது!
அகங்காரமென்ற வெறும் நீர்க்குமிழிதான் அது!
துறவியின் பதில் கேட்டு ஆங்காரமுற்ற
அரசன் உறுமினான்
“மோசடிக்கார மதியிலியே
இக்கணமே வெளியேறு நீ
என் நாட்டைவிட்டு!”
சாதுவாய்ப் பதிலளித்தார் துறவி
“தெய்வத்தை எங்கு
நாடுகடத்தினாயோ
அதே அவ்விடத்துக்கே
பக்தனையும் வெளியேற்றிவிடு தயைகூர்ந்து.”
தமிழில்
ஜமீலா ராசிக்