tamilnadu

img

எரிவாயு சிலிண்டர்; மானியம் எனும் ஏமாற்று வேலை

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதேபோல் மாநில அரசுகளும் வரி குறைப்பு செய்து அதன் பலனை சாமானிய மக்களுக்கு வழங்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளார். சாதாரணமாக சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மோடி அரசு அறிவித்தது. கடந்த சில  ஆண்டுகளாக எந்தப் பயனாளிக்கும் மானியம் கிடைக்கவில்லை. தற்போது சிலிண்டர் விலை ரூ.1000-த்தை தாண்டிவிட்டது.  

மானியம் வழங்குவோம் என்று கூறுவது  மோடி அரசின் மோசடி வேலை என்பது அம்பலமாகிவிட்டது. தவிர பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக அடுப்பும் முதல் முறை மட்டும் இலவசமாக சிலிண்டர்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து சிலிண்டர் வாங்கும்போது கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டும். கடந்த நிதியாண்டில், பிரதமர் மோடியின் முதன்மைத் நலத்திட்டமென அறிவிக்கப்பட்டது பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வு செய்த 90 லட்சம் பயனாளிகள் தங்களது எரிவாயு சிலிண்டர்களை நிரப்பவில்லை.  ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் எரிவாயு சிலிண்டர்களை ஒரு முறை மட்டுமே நிரப்பியுள்ளனர்.  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து 2021-ஆம் ஆண்டு மார்ச் வரை இணைப்புகளைப் பெற்றவர்களில் 65 லட்சம் வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பிக்கொள்ள முன்வரவில்லை.  

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 9.1 லட்சம் பேரும் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 15.96 லட்சம் பேரும் எரிவாயு நிரப்பவில்லை. எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1000-ஐத்தை தாண்டிவிட்ட நிலையில் கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்பாடு 45 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் ஒரு முறை மட்டுமே சிலிண்டர் நிரப்பிய வாடிக்கையாளர்கள் 52 லட்சம்,  இது இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 27.58 லட்சமாகவும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 28.56 லட்சமாகவும் இருந்தது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.