tamilnadu

img

குமரியில் கொடிகட்டிப் பறந்த கயிறு தயாரிக்கும் தொழில் பிளாஸ்டிக் வருகையால் தொலைந்தே போனது

நாகர்கோவில். பிப். 9- குமரி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்த கயிறு தயாரிக்கும் தொழில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் முற்றிலும் அழிந்து போனது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். கயிறு தயாரிப்பு பொருட்கள் கயிறு என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பட்டு, பருத்தி நூல்களால் திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருந்ததால், தேங்காய் விவசாயம் அதிகரித்து இருந்தது. தேங்காய்களில் ஈத்தாமொழி தேங்காய்க்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேங்காய் கூந்தல் மூலம், அதனை பதப்படுத்தி தும்பு தயாரித்து அதிலிருந்து அதிக அளவில் குமரி மாவட்டத்தில் கயிறு திரித்து விற்பனை செய்து வந்தனர்.

கயிறு வகைகள்

கயிறுகளில், வடக் கயிறு, பாரக் கயிறு,வால் கயிறு, கமலைக் கயிறு, கடகா கயிறு, பிடிக் கயிறு, தாம்புக் கயிறு, புணயல் கட்டிக் கயிறு, தும்புக் கயிறு, தென்னை மஞ்சுக் கயிறு உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. கூடாகிப் போன மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.கயிறுகள் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வந்தனர். தற்போது தென்னை மரங்களும் வெட்டப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. அதைப்போல் பிளாஸ்டிக் கயிறுகள் வரத்து அதிகரிப்பால் இந்த கயிறு வியாபாரம் சரிந்தது.

குடிசைத் தொழில்

இதனால், அதனை குடிசை தொழிலாக செய்து வந்த தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் கயிறு திரிக்கும் வேலையை விட்டு வேறு வேலைகளுக்கு செல்ல துவங்கினர். நாளடைவில் முற்றிலும் கயிறு திரிக்கும் வேலை பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை மட்டுமே நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு வேறு வேலைகளும் தெரியாது, செய்ய முடியாத வயதிலும் உள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் கயிறால் பாதிப்பு

இந்நிலையில் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட கயிறுகள் பயன்பாடு மக்களிடத்தில் அதிகரித்துள்ளது. அதனால் இந்த கயிறு தயாரிக்கும் தொழில் பாதிப்படைந்தது. ஒரு சில கயிறு தயாரிக்கும் நிறுவனங்களே இயங்குகின்றன. அங்கும் நவீன இயந்திரங்கள் மூலம் கயிறு தயாரிப்பதால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இந்த கயிறு தொழில் நலம் பெற இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த கயிறுகளை மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே இந்த தொழிலையும், தொழிலாளர்களையும் காக்க முடியும். நவீன இயந்திரம் மேலும் அரசு இந்த தொழிலாளர்களின் நலன் கருதி நவீன இயந்திரங்களை  மானியத்தில் கொடுப்பதுடன், அவர்கள் தயாரிக்கும் கயிறுகளை அரசு  வாங்கிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.       (ந.நி.)