பூமியின் அழுத்தங்கள் தாளாது
கடல் பொங்கி ஊருக்குள் வந்தது
ஆழிப்பேரலை என்றுரைத்தோம்...
மேகங்களின் இடிபாடுகளினால்
பெய்யென பெய்த மழையினால்
ஊரே உருக்குலைய கதறினோம்...
கடமைமறந்து காசுக்கு மையிட்டு
கண்ணியங்கள் தடம் மாறிப்போக
நேர்மை காணாது கலங்குகிறோம்...
சுயநலமே வாழ்வின் நகர்வாகிட
தீயென தீங்கிழைகள் படரலாகி
வீழாது விழுந்து தகிக்கிறது நாடு...
பாதைகள் புலப்படாது தடுமாறும்
அவரவரின் அன்றாட ஓட்டம் அது
நிதானிக்கவியலாது மிரள்கிறது...
அவதானிக்க முடியாத அனுமானம்
அல்லோலப் பட அவமானப்படுகிறது
தேசத்தின் எல்லைக்கோடுகள் தேடி...
வியாபாரமாகிப்போன நகர்வுகள்
விலை இல்லா இலவசங்கள் தேடி
கண்களையிழந்த இருட்டுவாழ்வு...
பொதுவென வை போராடு மனமே
அறிவியல் கூட்டி ஆராதி தினம்
சீராகும் உலகம் சினந்து சிவந்து...