பூமி உருவானதிலிருந்து இன்றுவரை உள்ள காலத்தை பல சகாப்தங்களாக பிரிக்கிறார்கள். அதில் ஒன்று ஆந்தரோபோசீன்(Anthropocene) என்பதாகும். பூமியின் புவியியல், நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு, சுற்று சூழல் ஆகியவற்றில் மனிதர்களின் தாக்கம் துவங்கிய காலத்தையே இவ்வாறு அழைக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டதாகவும் 1950களிலிருந்து தொடங்குவதாகவும் பல்வேறு கருத்துகள் உள்ளன. அதேபோல் இப்போது நிலவிலும் ஆந்த்ரோபோசீன் காலம் தொடங்கியுள்ளதாக ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. 1959இல் நிலவில் ரசியாவின் முதல் விண்கலம் இறங்கியதிலிருந்து இது தொடங்குவதாக கூறப்படுகிறது. நிலவின் பரப்பில் கால்ஃப் பந்துகள், கொடிகள், மனிதக் கழிவுகள் ஆகியவை விடப்பட்டு வந்துள்ளன. மேலும் அதன் பரப்பை தோண்டுவதும் மனிதர்களை அங்கே குடியேற்ற முடியுமா என்பதும் முயற்சிக்கப்படுகின்றன. “விண்வெளிப் போட்டியினால் நிலவின் நிலப்பரப்பு 50 ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்டிருக்கும். பல்வேறு நாடுகள் அங்கே சென்றிருக்கும். இதனால் பல்வேறு சவால்கள் தோன்றும். நிலவு மாறாமலிருக்கும் என்கிற மாயயை மாற்றி மனிதர்களின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கின்ற ஏற்படப்போகும் தாக்கங்களை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.