tamilnadu

img

தீக்கதிரும் சங்கர நாராயணன் அண்ணாச்சியும் - அண்ணாச்சி சங்கரநாராயணன்

1964ல் புதியதாக துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட மத்திய காங்கிரஸ் அரசாங்கம் அவ்வாண்டு டிசம்பர் 29ஆம் தேதியன்று நாடு முழுவதி லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தலைவர்களையும் தொண்டர்களையும் கைது  செய்து சிறையில் அடைத்தது. தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டனர். இதில் தீக்கதிர் பத்திரிகையை அச்சிட்டுத் தந்த எந்த அரசியல் கட்சியையும் சேராத அதன் உரிமையாளர் சத்திய நாராயணாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே அந்தக் குடும்பத்தினர் தீக்கதிர் பத்திரிகையை அச்சிட்டு தர மறுத்துவிட்டனர். தீக்கதிர் நின்று போனது.  இதனால் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்த மூத்த தோழரும் தேச பக்தருமான அண்ணாச்சி வி.சங்கர நாராயணன், கோவை ஈஸ்வரனையும் என்.ராமகிருஷ்ணனையும் அழைத்து தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியராக தன்னை  அறிவிக்கக்கோரும் மனுவை பிரதம மாகாண மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்பிக்கும்படி கூறினார்.  அன்று சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் தீ வைப்பு, கல்லெறி என்று பெரும் கலவரமாக இருந்தது.

இதற்கிடையிலும் இவ்விருவரும் நீதிமன்றத்திற்குச் சென்று மனுவைச் சமர்ப்பித்து விட்டு வெளி வரும் போது சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே கைது செய்யப் பட்டனர். அன்று மட்டும் சென்னையில் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய சிறையில் ஒரு அறைக்கு 14 பேர் வீதம் அடைக்கப்பட்டனர்.  4 நாட்களுக்கு பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அடுத்த நாள் காலை யில் என்.ஆரும் கோவை ஈஸ்வரனும் கைது செய்யப்பட்டு ஆணையாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறையினர் ஒரு திட்டம் தீட்டியிருந்தனர். அதாவது புதிதாக உருவான இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி இந்த கலவரத்தில் பங்கெடுத்தது என்றும், தீ வைப்பில் ஈடுபட்டது என்றும் ஒரு மோசடியான குற்றச்சாட்டை உருவாக்கி இந்த இரண்டு பேர் அதற்கு பொறுப்பு என்றும் ஒரு வழக்கை பதிவு செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இவ்விருவரும் ஆணையாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் முன்னரே அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் வழக்கறிஞராக இருந்த தோழர் ஏ.எம். கோதண்டராமன் இந்தத் தகவலை கேள்விப்பட்டு ஆணையாளர் அலுவலகம் சென்றார். அங்கிருந்த உதவி ஆணையாளர் ராமன் என்பவருடன் இவ்விருவரையும் ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டு பலத்த வாக்குவாதம் செய்துள்ளார்.  பின்னர் அவர் வெளியே வரும் போது ‘நான் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு (ஹேபியஸ் கார்ப்பஸ்) தாக்கல் செய்து இவ்விருவரையும் விடுதலை செய்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதை கேட்ட காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆள் கொணர்வு மனு என்றால் நீதிமன்றத்தில் இவ்விருவரையும் கொண்டு சென்று நிறுத்த வேண்டும், அவர்கள் மீதான குற்றச்சாட்டை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இவ்விருவர் மீது எவ்வித குற்றச்சாட்டோ, சாட்சியமோ கிடையாது என்பதைக் கண்ட அதிகாரிகள் இவ்விருவரையும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டுக் காலம் வேலூர் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.