tamilnadu

img

பாரபட்சமில்லா கிரிக்கெட் ஆடுகள அமைப்பு தென் ஆப்பிரிக்காவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்

கிரிக்கெட் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்து 2000-ஆம் ஆண்டு வரை (தோராயமாக) நாடுகளின் செயல்பாடு, வீரர்களின் திறமை பற்றி தான் அதிகம் பேசப்படும். அதாவது இந்த நாடு, இந்த நாட்டு வீரர் அருமையாக விளையாடுவார் என தான் பேச்சுக்கள் எழும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மைதானங்கள் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது.  காரணம் தங்களுடைய நாட்டு வீரர்களின் திறமைகளுக்கு ஏற்ப மைதானங்களை அமைத்து வெற்றியை தங்கள் வசம் கொண்டு வருகிறார்கள். இந்த வகையான செயல்பாடுகளுக்கு முதன்மையாக இருப்பது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தான்.  இந்திய வீரர்கள் மிதமான வேகத்தில் பேட்டிங்கும், சுழற்பந்துவீச்சுகளில் அருமையாக செயல்படுவதால் இந்திய வகை மைதானங்கள் மெதுவான வகையில் உருவாக்கப்படும்.  ஆஸ்திரேலிய நாடோ தங்கள் நாட்டு வீரர்கள் வேகப்பந்தை விரும்பி வீசுவார்கள், பேட்டர்கள் வேகப்பந்து வீச்சை கழுகு கண் பார்வையுடன் விளாசுவார்கள் என்பதால் வேகம் சார்ந்த உயிரோட்டமான வகையில் ஆடுகளத்தை வித்தியாசமான களிமண்ணில் உருவாக்குவார்கள்.

இங்கிலாந்து நாட்டினரோ சுவிங் எனப்படும் எழும்பும் பந்துவகைக்காக ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. சுவிங் வகை ஆடுகளங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மாறும். இப்படி ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஆடுகளத்தை உருவாக்கி வெற்றியை வசப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா நாடு மட்டும் தங்கள் நாட்டின் சீதோஷ்ண நிலை மற்றும் கிரிக்கெட் விதிகளின் உட்பட்ட வகையில் ஆடுகளத்தை தயார் செய்து வருகிறது. பொதுவாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் எந்த நாடுகள் விளையாடினாலும் சரிசம மோதலுடன் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக நடைபெறும்.  தற்போது நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தான் இதற்கு சாட்சி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இரு அணிகளும் அசத்தலாக செயல்பட்டு தொடரை சமனில் வைத்து கடைசி டெஸ்ட் போட்டியில் யாருக்கு கோப்பை என்ற வகையில் விளையாடி வருகிறது. இரு அணி வீரர்களின் திறமை இங்கு வெளிப்படுகிறது அதற்கு காரணம் பாரபட்சமின்றி அமைக்கப்பட்ட மைதானங்கள் தான்.  இதனை அனைத்து நாடுகளும் பின்பற்றினால் கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு ஆட்டமும் தனி சுவாரஸ்யத்துடன் நகர்ந்து உலகின் முதன்மையான விளையாட்டான கால்பந்து விளையாட்டைக் கூட பின்னுக்குத்தள்ளி கிரிக்கெட் முதன்மை இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.