tamilnadu

img

ஆளுநர் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியதையடுத்து பிற மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதா மீதான ஆளுநரின் முடிவு வரும் வரை, கலந்தாய்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படமாட்டாது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
கலந்தாய்வு மற்றும் 7.5சதவிகித உள் ஒதுக்கீடு முடிவு ஆகியவற்றை எதிர்நோக்கி மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி, ஆளுநரைச் சந்தித்த செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
அப்போது ஆளுநர் இவ்விவகாரம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறியதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். 
ஆனால் தற்போது வரை  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் அமைதியாகவே இருக்கிறார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கினால், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கத் தயார் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் தரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கைக் தடை கோரிய மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தமிழக மூத்த அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து இந்த சட்டம் குறித்து விளக்க அளித்தனர். அப்போது அவர் சில காலம் அவகாசம் வேண்டும் என கூறியதாக தெரிவித்தார். 
இதையடுத்து நீதிபதிகள் 8 கோடி மக்களின் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் இணைந்து மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் சூழலின் அவசியம் கருதி முடிவெடுக்க  ஏன் இவ்வளவு காலம் ஆகிறது. அரசியல் அமைப்பில் வரையறுக்க பட வில்லை என்பதற்காக காலதாமதம் ஏற்படுத்தலாமா? ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது அவர் அரசியல் அமைப்பு சட்டப்படி தான் நடக்க வேண்டும் ஆனால் ஆளுநர் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டாமா. அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் இதுபோன்றசூழல் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனாலேயே அவர்கள் ஆளுநருக்கு 4 விதமான அதிகாரங்கள் வழங்கி உள்ளனர். இந்நிலையில் ஏழை எளிய மாணவர்களின் நிலை கருதி முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள இதுபோன்ற சட்டத்தின் நிலை குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.