tamilnadu

img

கேள்விக்குறியாகும் சலவைத் தொழிலாளர்களின் எதிர்காலம்!

கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் ஆற்றின் கரைகளில்  சலவைத் தொழிலாளர்கள்  தங்களது வாடிக்கையாளர்களி டம் பெறும் அழுக்குத்துணிளை மூடையாக கட்டிக்கொண்டு  வந்து அன்றாடம் துவைத்து சலவை செய்து ஓரிரு நாட்களில் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து பணம் பெற்று வாழ்க்கை நடத்திவந்தனர். தற்போது இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. சலவை இயந்திரங்கள். கெமிக்கல் கலந்த சலவைபொடிகள், மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தில் இயங்கும் தேய்ப்புப் பெட்டிகள் வரத்தும் ஒரு காரணம். மற்றொருபுறத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்றுப்பரவல் இவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. “கொரோனா  ஊரடங்கின் போது  பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டேன்.   வாடிக்கையாளர்கள்  வீடுகளிலேயே துணிகளை துவைத்து  தேய்த்துக்கொள்கின்றனர். சலவைத் தொழிலாளர்களை தேடுவதை நிறுத்திக்கொண்டனர் என்கிறார் திருச்சிராப்பள்ளி கிராஃபோர்டில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை சலவைத்  தொழிலாளி ரவி.

அவர் மேலும் கூறும்போது, பல ஆண்டுகள் எனது தந்தையுடன் இணைந்து நிலக்கரியை வாங்கி வந்து  எரியூட்டி இரும்புப் பெட்டியில் போட்டு சலவை செய்து  வந்தோம். பின்னர் மின்சார பயன்பாட்டிற்கு மாறினோம். இதனால் செலவுகள் அதிகரித்துள்ளது. கடைக்கு ரூ.5,000  வாடகை கொடுக்கிறேன்.  மின் கட்டணம் மாதம் ரூ.4,500 வரை கட்டி வந்தேன். கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்கள் எங்களை விட்டு விலகிச் சென்று விட்டனர். இப்போது சேமிப்பது கேள்விக்குறியாகிவிட்டது. பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் மட்டுமே ஆற்றிற்கு சென்று சலவைத் தொழில் செய்கிறேன் என்றார். பிச்சாண்டவர் கோவில்  பகுதியில் உள்ள டிரை கிளீனர்ஸில் பணியாற்றி வரும் சலவைத் தொழிலாளி ஒருவர் கூறுகையில், எரிவாயு சிலிண்டர் மூலம் தேய்ப்புப் பணியை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் நாளொன்றுக்கு  300 புடவைகள் வரை அயர்ன் செய்தோம்,  வணிக சிலிண்டர்களின் விலை ரூ.2,000 ஆக இருப்பதால், இனி இந்த இயந்திரங்களை லாபகரமாக இயக்குவது சாத்தியமில்லை என்றார்.

சலவைக்கு தேவைகளான சோப்பு, சலவை சோடா, ப்ளீச் மற்றும் ஸ்டார்ச் பவுடர் ஆகியவற்றின் விலை கடந்த  ஆண்டு முதல் படிப்படியாக உயர்ந்துவருகிறது. எங்களால் வாடிக்கையாளர்களை  தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. முன்பு போல் துணி துவைக்க,  அயர்ன் செய்ய வேலையாட்கள் கிடைப்பதில்லை என்றார். சன் டிரை கிளீனர்ஸ் உரிமையாளர் எம்.ராமமூர்த்தி கூறுகையில் நான் எனது உறவினரின் உதவியுடன் தொழிலை நடத்துகிறேன், மேலும் பருத்தி ஆடைகளை அயர்ன் செய்வதற்கு தோராயமாக ரூ.80. பட்டுப் புடவைகளுக்கு ரூ.300 வாங்குகிறோம். கூலியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வாடிக்கையாளர்கள் முன்வைக்கிறார்கள். அதே நேரத்தில்,  வேலையின் தரத்தை விரும்புபவர்கள்  எங்களிடம் வருகிறார்கள். ஆனால்  வேலையின் தன்மை மாறிவிட்டது.  நாளொன்றுக்கு 100 ஆடைகள் வரை அயர்ன் செய்தேன். இப்போது  30 ஆடைகள் வரை அயர்ன் செய்கிறோம். மற்றவற்றை அவுட்சோர்சிங் முறையில் கொடுத்துவிட்டோம். இதனால் செலவு அதிகரித்துள்ளது என்றார்.