வி.சி.க.வுடன் நீங்கள் தொகுதிப் பங்கீட்டை முடித்த மறுநாள் அதன் துணைப் பொதுச்செய லாளர் மீது ரெய்டு நடக்கிறது. சிவசேனா, ஆர்.ஜே.டி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்களுக்கும் இது நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன. இவை ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்கிறார் பிரதமர். இது வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இது ஒரு தேர்தல் பிரச்சனையாக மாறுமா?
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் இவற்றைக் குறிவைத்தே அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை ரெய்டுகள் மேற்கொள்ளப்படு கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி விட்டால், அவர்கள் மீதான ஊழல் கறையைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் வாஷிங் மெஷினாக பா.ஜ.க. செயல்பட்டு, அவர்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியும் வழங்கி வருகிறது. மற்ற கட்சிகளையெல்லாம் ஊழல்வாதிகள் என்றும், தாங்கள் மட்டுமே யோக்கிய சிகாமணிகள் என்றும் சொல்லி வந்த பா.ஜ.க.வின் முகத்திரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. அமலாக்கத் துறையால் நடவடிக்கைக்குள்ளான நிறுவனங்கள் பல அடுத்த சில நாட்களில் பா.ஜ.க.வுக்கு பெருமளவில் நிதியளித்திருப்பது வெளிப்பட்டுள்ளது. இதி லிருந்தே அரசியல் கட்சிகளையும் நிறுவனங்களையும் மிரட்டுவதற்காகவே அமலாக்கத்துறை என்கிற அமைப்பை மோடி அரசு பயன்படுத்தியிருப்பதும், அதன் மூலமாக நூற்றுக்கணக் கான கோடிகளை நிதியாகப் பெற்றிருப்பதும் உறுதியாகிவிட்டது. உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள்.
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி வேட்பாளர்களை அறிவித்துள் ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளத்துடன் மற்றுமொரு கட்சியை ‘இந்தியா கூட்டணி’ இழந்துவிட்டதா?
ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கிறதோ அதற்கேற்பத் தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும் என்பதும், அந்தந்த மாநிலங்களிலும் பெறுகின்ற முழுமையான வெற்றியின் மூலம் ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன். ஒரு சில கட்சிகள் தங்களின் மாநில அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தில் செயல்படுவதைத் தவிர்க்க முடியாது. பா.ஜ.க. மீது மக்களுக்குள்ள கோபத்தை வாக்குகளாக மாற்றும் சக்தி பெற்ற அரசியல் கட்சிகளே தற்போதைய தேர்தல் களத்தில் முதன்மையாக இருப்பதைப் பல மாநிலங்களிலும் காண முடிகிறது.
தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிக்கிறது. ஆனால் இதில் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்.பி.ஐ தெரிவித்த பதில் அந்த அமைப்பு களின் சுதந்திரத்தன்மை மற்றும் நேர்மையை சந்தேகத்துக்குள்ளாக்கி யுள்ளதே?
இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை யாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதன் உத்தரவுகளையே புறக்கணிக்க நினைப்ப தும், காலம் தாழ்த்த நினைப்பதும் அரசமைப்பு க்கு எதிரான செயல். சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப்பண த்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்ன மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, அதில் ஒரு நயா பைசாவைக் கூட மீட்காமல், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்லாயிரம் கோடிகளைப் பல நிறுவனங்க ளிடமிருந்து நிதியாகப் பெற்று, நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது.
தேர்தல் ஆணையர் அருண் கோய லின் திடீர் பதவி விலகல் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அரசியல் அழுத்தமும் கருத்து வேறுபாடு களும் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர் தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மை கேள்விக்குள்ளாகி யுள்ளது பற்றி?
தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய எந்தவொரு அமைப்பையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டி ருப்பதைக் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்துவிட்டோம். தேர்தல் ஆணை யத்தின் மீதான பா.ஜ.க அரசின் ஆதிக்க மும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாய கத்தைக் காக்கின்ற போராட்டத்தில் இதனையும் கவனத்தில் கொண்டே செயல்படுகிறோம்.
தி.மு.க.வும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது எனக் கூறி, பா.ஜ.க. விமர்சனத்தில் இருந்து நழுவுகிறதே?
தி.மு.க என்பது தனது முதல் தேர்தல் களத்திலிருந்தே தேர்தல் நிதி திரட்டுகிற இயக்கம்தான். 1967 தேர்தலில் 10 லட்சம் என்கிற தேர்தல் நிதி இலக்கு நிர்ணயித்தார் பேரறிஞர் அண்ணா. 11 லட்சமாகத் நிதி திரட்டித் தந்தார் கலைஞர். நாங்கள் நிதி திரட்டுவது என்பதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கம்தான். இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம். ஆனால், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக - குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.க.வின் யோக்கியத்தன்மை என்ன என்பதும், அது யார்- – யாரிடம் எதற்காக- எத்தகைய நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பா.ஜ.க.
கேரளம், மேற்கு வங்க முதலமைச்சர்களைத் தொடர்ந்து நீங்களும் சி.ஏ.ஏ. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது எனக் கூறியிருக்கிறீர்கள்? அது சாத்தியமா?
ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. இந்தி மொழி தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராகத்தான் பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்தினார். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற ஒன்றிய அரசின் நடை முறையை மாநில அரசு ஏற்கவில்லை. அதுபோலத்தான் சி.ஏ.ஏ.விலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இதற்குரிய அரசியல் சட்ட உரிமைக்கான வழியையும் நீதிமன்றத்தின் மூலம் நிலை நாட்டுவோம்.
5 ஆண்டுகள் கழித்து சி.ஏ.ஏ நடை முறைப்படுத்துவதற்கான விதிமுறை களை பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. இது திசைதிருப்பும் உத்தி என்கிறார் கள் சிலர். வாக்காளர்களை மதரீதி யாகப் பிரிவினை செய்யும் செயல் என்கிறார்கள் சிலர்? சி.ஏ.ஏ. பா.ஜ.க. வின் ரகசிய ஆயுதமா?
மத ரீதியாக – மொழி ரீதியாக – சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலைத்தான் பா.ஜ.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கம்தான் சி.ஏ.ஏ. தற்போது சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே இது தெரிந்தாலும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வெவ்வேறு மொழி பேசும் மக்களை நோக்கியும் புதிய சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வரும். அதற்கு சி.ஏ.ஏ. ஒரு முன்னோட்டம்.
கூட்டணிக் கட்சிகளுடன் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகத் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டீர்கள். 2019-ஐ விட இம்முறை குறைந்த தொகுதிகளில்தான் தி.மு.க போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியினரை அனுசரித்துப் போக வேண்டுமென தி.மு.க. சமரசம் செய்து கொண்டதா?
இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்பதை 2019, 2021 தேர்தல்களில் நிரூபித்தோம். அதே கூட்டணி இப்போதும் தொடர்கிறது. தோழமைக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொகுதிப்பங்கீடும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கூட்டணியின் தொடர் செயல்பாடு. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி களிலும் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் இலக்கு.
5 மாநிலத் தேர்தல் தோல்விகளில் இருந்து (தெலுங்கானா வெற்றி தவிர்த்து), இந்தி மாநிலங்களில் பா.ஜ.க.வை சமாளிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி மீண்டுவிட்டதா?
ஒரு சில மாதங்களுக்கிடையே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் மக்களின் தீர்ப்புகள் மாறுபட்டி ருப்பதைப் பல தேர்தல்களில் பார்த்தி ருக்கிறோம். இனியும் பார்க்கலாம்.
கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறிய நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய்யாத்திரையைத் தொடர்ந்ததைச் சிலர் விமர்சிக்கிறார்களே?
ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கைக் குரிய தலைவராக உள்ளார். அரசியல் மட்டு மல்ல, சமூகக் கருத்துகளையும் துணிச்சலாக அவர் வெளிப்படுத்தி வருகிறார். களத்தில் அவருடைய பங்களிப்பு நிறையதேவைப்படும்.
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில்தான் இந்தியா கூட்டணி வேலையைத் தொடங்கி யிருக்கிறதா? வாக்குகளைக் கவரப் போதிய அவகாசம் இருக்கிறதா?
இந்தியா கூட்டணி என்பது தன்னுடைய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. அவற்றை ஒருங்கி ணைக்கும் பணிகளும் நடைபெற்று வரு கின்றன. தேர்தல் பரப்புரைகளின் போது உங்களின் கேள்விக்கான விடையை நேரில் காண்பீர்கள்.
வடக்கில் காங்கிரஸ் பெற்ற தோல்வி களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை இம்முறை குறைப்பீர்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அதே பத்து தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறீர்களே? ஏன்?
யூகங்களாகப் பல செய்திகள் வெளியாகி யிருக்கலாம். ஒரு சில தேர்தல் தோல்விகள் அடிப்படையில் எல்லா அம்சங்களையும் புறக் கணித்துவிட முடியாது. பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்கக்கூடிய தேசிய அளவிலான கட்சி காங்கி ரஸ். அதற்குரிய இடத்தை வழங்கியிருக்கிறோம்.
தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. மிகவும் தாராளமாக நடந்து கொண்டதாகக் கூறப் படுகிறதே? மேலும் கடினமான தொகுதி களில் தானே நேரடியாகக் களமிறங்கு வதாகவும் தெரிகிறது. இது என்ன உத்தி?
தி.மு.க.வைத் தோழமைக் கட்சியினர் நம்பு கிறார்கள். தோழமைக் கட்சிகளை தி.மு.க. மதிக்கிறது. கள நிலவரத்தையும் தி.மு.க. உணர்ந்திருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் தற்போதைய தொகுதிப் பங்கீடு.
அதேநேரம், விடுதலைச் சிறுத்தை களுக்குப் பொதுத் தொகுதி ஒதுக்காததால் விமர்சனமும் எழுந்துள்ளதே? அதில் என்ன சிக்கல்?
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதைய தேர்தல் களத்தையும் சூழலையும் பற்றி முழுமையாகக் கலந்தாலோசித்துத்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. அது குறித்து, சகோதரர் திருமாவளவன் அவர்களே தெளிவாக விளக்கிவிட்டார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி சேலம் மாநாட்டில், வரும் தேர்தலில் இளைஞரணி யினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கோரிக்கை வைத்துள்ளாரே? அது நடக்குமா?
மூத்தவர்கள் – இளையவர்கள் - பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும்.
கர்நாடக பா.ஜ.க. எம்.பி ஒருவர் அரசி யலமைப்பை மாற்ற வேண்டும் என வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரே? அக்கட்சியினர் இப்படி பேசுவது இது முதல் முறையும் அல்ல. இது அரசிய லமைப்புக்கு ஆபத்து என நினைக்கிறீர்களா?
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். இதைத்தான் வெளிப்படையாக அவர் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை.
எதிர்வரும் தேர்தல் கொள்கைசார்ந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வாக்காளர்களிடம் கவனம் பெறும் விஷயங்களாக எவை இருக்கும்?
பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகள், துரோகங்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சதிகள், மாநில உரிமைகளுக்கான ஆபத்து இவற்றுக்குள் நீங்கள் சொன்ன அனைத்தும் அடங்கும். அவையே தேர்தல் களத்தில் நாடெங்கும் எதிரொலிக்கும்.
நன்றி: முரசொலி