மதுக்கூர் இராமலிங்கம்
கீழடியில் 9 ஆம் கட்ட அகழ்வாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். தமிழக முதல்வரால் மார்ச் 5 ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம் தமிழக மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை வார நாட்களில் தினந்தோறும் 2 ஆயிரம் பார்வையாளர்களும், வார விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பார்வை யாளர்களும் கண்டு வியந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், கீழடி புனைமெய்யாக்க செய லியையும் துவக்கி வைத்துள்ளார். வெளிநாட்டி னரும்கூட கீழடிக்கு வரத் துவங்கியுள்ளனர். தமிழர் நாகரிகத்தின் தொன்மை உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது இந்துத்துவா வாதிகளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பொய்களும் புனைவுகளும் கலைந்து வருவது குறித்து கலக்கமடைந்துள்ள அவர்கள், தங்களது தாக்குதலை உக்கிரமாக்கியுள்ளனர். தன்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள கீழடியை இதுவரை எட்டியே பார்க்காத பாஜக தலைவர் எச்.ராஜா, 2019ஆம் ஆண்டு பிப்.6 அன்று பேசும்போது, கீழடியில் சிவலிங்கமும் கணேசமூர்த்தி சிலையும் கண்டுபிடிக்கப் பட்டதாக அடித்துவிட்டார். ஆனால், எந்தவொரு மதச் சின்னமும் அங்கு கண்டறியப்படவில்லை என்பது உறுதி யானவுடன், அவரது ஆத்திரம் அதிகமானது. இப்போது, புதுக்கதையை துவங்கி உள்ளார். கீழடியில் ஆழமாகவும் அகலமாகவும் தோண்டா மல், தமிழர்களின் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், சனா தனத்தின் வயது 15 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறியுள்ளார். சனாதனத்தின் வயது 15 ஆயிரம் ஆண்டுகள் என்பதை இவர் எப்படி கண்டுபிடித்தார்.
கேட்டால், சரஸ்வதி நதிக்கரையில் சனாதனத்தின் புதை குழியில் அதற்கான அடையாளங்கள் இருக்கிறது என்பார். சரஸ்வதி நதி எங்கே ஓடுகிறது என்று கேட்டால், அது பூமிக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மனதுக்குள் மர்மமாக ஓடுகிறது என்பார். இந்த மர்ம நதியை கண்டுபிடிக் கத்தான் ஒன்றிய நிதியமைச்சர் பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். இது ஒருபுறமிருக்க, கீழடியில் ஆழமாகவும் அகல மாகவும் தோண்டுவதை தடுத்தது யார்? ஒன்றிய அரசின் அகழ்வாய்வுத் துறை கீழடி அகழ்வாய்வை ஊற்றி மூட முயற்சி செய்தது. அங்கு ஆய்வுப் பணி மேற் கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை, அசாமிற்கு தூக்கி அடித்தது. அவரை மீண்டும் தமிழகத்திற்கு மாற்றுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை. அவர், அதுவரை செய்த ஆய்வு முடிவுகளை எழுதித் தரக்கூட அவரை அனுமதிக்கவில்லை. ஒன்றிய அரசு கூறியபடி, சாமி சிலைகள் கீழடியில் கிடைத்திருப்பதாக எழுதித் தருமாறு கேட்டதற்கு, அவர் மறுத்ததாகவும் அதனாலேயே அவர் அசாமிற்கு தூக்கி அடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் பெங்களூரு வுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு, மூன்று கட்ட அகழ்வாய்வோடு ஒன்றிய அரசு கீழடி ஆய்வை முடக்க முயன்றது. வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் இந்த ஆய்வு தொடர்வதற்கு முக்கிய காரண மாகும். அமர்நாத் ராமகிருஷ்ணாவைத் தொடர்ந்து, கீழடி ஆய்வின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராம் என்ற ஆர்எஸ்எஸ் ஆதரவு ஆசாமி கீழடியில் குடும்பங்கள் வாழ்ந்ததற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை. வேண்டுமானால், தொழிற்சாலை கள் இருந்திருக்கலாம் என்று பூசிமெழுகினார். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவற்றின் தொடர் தலையீடு காரணமாகவே கீழடி அகழ்வாய்வு தொடர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கீழடியில் அகழ் வாய்வு தொடர்ந்ததோடு, பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழ்வாய்வில் முக்கியப் பங்காற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் ஆகியோரை முதல்வர் கீழடி அருங்காட்சியக திறப்பு விழாவின் போது கவுரவித்தார்.
கீழடி அகழ்வாய்வுப் பணி துவங்கியதிலிருந்து அதை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், ஆய்வு தொடரவும் இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் சாதாரணமானது அல்ல. சிந்து சமவெளி நாகரிகத்தையே வேத நாகரிக மாக மாற்ற முயன்று தோற்றவர்கள் எரிச்சலடைந்தனர். கீழடியில் திராவிட நாகரிகத்தின் தொன்மையும், தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட தமிழர்கள் வாழ்வியலுக்கான பொருண்மைச் சான்றுகளும் கீழடியில் கிடைத்துள்ளதால், இந்திய வரலாறு உண்மையான கோணத்தில் எழுதப்பட வேண்டும். அது தமிழகத்திலிருந்து துவங்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்ததால் இவர்கள் ஆத்திரமடைந்தனர். கீழடியில் ஒன்றும் இல்லை என்று கூறி, ஊற்றி மூடிவிட முயன்றது தோற்று, உண்மை வரலாறு மேலெழுந்து வருவது வலதுசாரிகளின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது. கீழடி அகழ்வாய்வு துவங்கியதிலிருந்தே தோழர் சு.வெங்கடேசன் இதில் தனித்த ஆர்வம் காட்டினார். பொது வெளியில் இதுகுறித்து உரக்க குரல் எழுப்பினார். அமெரிக்காவில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில்கூட ‘கீழடி தமிழர்களின் தாய்மடி’ என முழக்கமிட்டார்.
சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் நடத்திய தமிழர் உரிமை மாநாட்டிற்கு கீழடியிலிருந்து பிடிமண் எடுத்துச் செல்லப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசின் நயவஞ்சகப் போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்தினார். “சிந்துவும் வைகையும் இம்மண் ணின் ஆதிப் பண்பாட்டின் தொடர்ச்சி, இந்துத்துவா சனா தன்கள் உருவாக்கும் ஆரிய - வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகை யும் இருக்கிறது. எனவேதான், கீழடி எங்கள் தாய்மடி எனக் குறிப்பிட்டோம்” என்று பெருமிதப்பட்டார். அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமில் உள்ள காளை. அது சிந்துவெளி நாகரி கத்தின் அடையாளம். அதே திமில் உள்ள காளை தான் கீழடி அருங்காட்சியகத்திலும் துள்ளிக் குதிக்கிறது. கீழடி அகழ்வாய்வு கண்டறியப்பட்ட எலும்புத் துண்டு களை பகுப்பாய்வு செய்து, திமில் உள்ள காளையை அடையாளப்படுத்தி உள்ளனர். கீழடியில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துக்கள் 80 சதவீதம் சிந்துவெளி குறியீடுகளோடு பொருந்திப் போகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில்தான், கீழடி அருங்காட்சியகத்திற்கு திரைக்கலைஞர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் பார்வையிட வந்தனர்.
இந்த வரலாற்றுப் பெருமையை விளக்கிச் சொல்ல சு.வெங்கடேசன் எம்.பி. யும் சென்றிருந்தார். பாஜகவின் அறிவிக்கப்படாத அதி காரப்பூர்வ ஏடான தினமலர், சினிமாக்காரர்களுக்காக பொதுமக்கள் காக்க வைக்கப்பட்டதாக கதை கட்டி விட்டது. அவர்கள் வந்து சென்றதில் எந்த விதிமீறலும் இல்லை என அதிகாரிகள் விளக்கமளித்த பிறகும், அவர்கள் ஓயத் தயாராக இல்லை. இப்போதுகூட எச்.ராஜா, சூர்யா குடும்பத்தை அழைத்து வந்து சு.வெங்கடேசன் உபசரித்தார் என்று பொருமியுள்ளார். தமிழர்களின் வரலாற்றுச் செய்தி களை எடுத்துரைப்பது அவருக்கு உபசரிப்பாக தெரிகிறது. ஒருவேளை, இவர்கள் திட்டப்படி கீழடியில் சிவலிங்கம் சிலையை வைத்து எடுத்திருந்தால், இந்நேரம் எச்.ராஜா குடமுழுக்கு நடத்தி தலைமை பூசாரியாகவே மாறியிருப்பார். அது நடக்காத ஆத்திரத்தில் எகிறி குதிக்கிறார். தினமலர் ஏடு கீழடியில் சு.வெங்கடேசன் தனது பிறந்த நாளை கொண்டாடியதாகவும் ஒரு கதையை அவிழ்த்துவிட்டது. நியூஸ் 7 தொலைக்காட்சி கீழடி குறித்து அவரிடம் ஒரு நேர்காணல் எடுத்திருக்கிறது. அன்றைக்கு அவரது பிறந்த நாள் என்பதால், அருங்காட்சியகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபத்தில் தொலைக்காட்சி கலைஞர்கள் கொடுத்த கேக்கை வெட்டியுள்ளார். அவர்கள் கொடுத்த சிற்றுண்டியையும் பகிர்ந்திருக்கிறார். இதையும் பூதாகரப்படுத்தியது தினமலர் ஏடு. அதற்கு அதை முழுமையாக மறுத்த சு.வெங்கடேசன், சங்க கால நாணயவியல் அறிஞரான தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வழியை அந்த ஏடு தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழர்களின் நாணயம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஏட்டின் நாணயம் இப்போது தேடப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா. சுசீந்திரன் உள்ளிட்டவர்கள் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அண்ணாமலையுடன் சேர்ந்து கொண்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தாக்குவதற்கு சதி செய்தவர்களில் இவரும் ஒருவர் என அப்போது அந்தக் கட்சியில் இருந்த மருத்துவர் சரவணன் கூறியதை நினைவு கூர்ந்தால், இவரது யோக்கி யதையை புரிந்து கொள்ள முடியும். இந்த மகா யோக்கிய சிகாமணி, கீழடி அருங்காட்சி யக பராமரிப்பை ஒன்றிய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி ஒப்படைத்தால், அடுத்த நாளே அதை மூடிவிட்டு போய் விடுவார்கள். அல்லது வழக்கமாக தாங்கள் செய்து வரும் வரலாற்று மோசடியை அங்கும் அரங்கேற்று வார்கள். கீழடியை கைவிட்டு ஓடிய ஆட்சியின் கட்சி யைச் சேர்ந்தவர் இவ்வாறு கோர அருகதையற்றவர். 2600 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கீழடி வரலாற்றையே காத்திருக்க வைத்தவர்கள் இவர்கள். காளையை குதிரையாக்க முயன்ற சிகாமணிகள். பரியை நரியாக்கிய திருவிளையாடல் ஏற்கனவே மதுரையில் மாணிக்கவாசகருக்காக நடந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இப்போது இந்த நரிகள் பரிகளாக வேசம் போட்டு, ஊளையிட்டு ஓடிக் கொண்டிருக்கின் றன. இந்த நரிகள் ஊளையிடுவதைப் பார்க்கும் போது நடப்பதெல்லாம் சரியாகவே நடக்கிறது என்று தெரிகிறது.