தமிழகத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணியாற்றி அந்த ஊழியர்கள் சங்கத் தில் முக்கிய பொறுப்புகள் வகித்து அர்ப்பணிப் போடு செயல்பட்ட பல தோழர்களை பற்றிய கட்டுரைகள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. எல்.ஐ.சி. நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக் கையில் உள்ள முகவர்கள் உள்ளனர். இவர்களை திரட்டுவதில் முக்கிய பாத்திரம் வகித்து வரும் சுத்தானந்தம் தோழரைப் பற்றியது இக்கட்டுரை. இவர் 1947ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராம, இராமநாதபுரம் மாவட்டம் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த வர். இவரது தந்தை சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். காங்கிரஸ் இயக்கத் தைச் சார்ந்தவர். சுத்தானந்தம் இராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வி முடித்து காரைக்குடியில் அழகப்பா பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மெக்கானிக் படித்தவர்.
படிப்பு முடிந்தவுடன் தோழர் சுத்தானந்தம் 3 வருடங்கள் கோவை ஜி.டி. நாயுடு கம்பெனி யில் ஜூனியர் இஞ்சினியர். பின்பு சென்னை இராம்நாத் மெடல் ஃபோர்ஜிங்கில் தலைமை இஞ்சினியராக 7 வருடம். அதன் பின்னர் கோவையில் விஜய்குமார் ஃபோர்ஜிங்கில் 5 வருடம். பின்பு தஞ்சாவூரில் சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழக சேர்மனுடன் பங்குதாரராக சண்முகா பிரிசிஷென் அண்ட் ஃபோர்ஜிங் என்ற தொழில் நிறுவனத்தை தொடங்கி 15 வருடம் அவருடன் தொழில் செய்தவர். கோவையில் விஜய்குமார் ஃபோர்ஜிங்கில் பொறியாளராக வேலை செய்கிற போது, அந்த நிறுவனத் தொழிலாளர்கள் அவர்களது பிரச்சனைகளுக்காக இவரை அணுகிய போது சிஐடியு சங்கத்தை துவக்குங்கள் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். சிஐடியு சங்கம் துவக்கப்பட்டு நிர்வாகத்தோடு போனஸ் போன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் சங்கத்தி னுடைய கோரிக்கையை ஏற்க முடியாது; கம்பெ னியை மூடி விடலாம் என முதலாளி பொறியா ளர் சுத்தானந்தத்திடம் கூறியிருக்கிறார். “நாம் பாதுகாப்புத் துறைக்கு தேவையான சில உற்பத்திகளை செய்து கொடுக்கிறோம். திடீரென்று மூடினால் நமது நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் பாதுகாப்புத்துறை சேர்த்து விடும்” என கூறியிருக்கிறார். இச்சூழலில் இவரை வேலையை விட்டு செல்லும்படி முதலாளி கேட்க, இவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மானாமதுரைக்கு திரும்பிவிட் டார். மானாமதுரையில் அன்றைய சிஐடியு மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் பாண்டி, சுத்தானந்தத்தை தோழர் எஸ்.ஏ. பெரு மாள் அவர்களுக்கு (ஒன்றுபட்ட முகவை மாவட்ட கட்சி செயலாளர்) அறிமுகப்படுத்தி யிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட தொடர்பு, நடை பெற்ற அரசியல் விவாதம் போன்ற பின்னணி யில் தோழர் சுத்தானந்தம் உற்சாகம் அடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1983இல் துணைக்குழு உறுப்பினராகி அடுத்தடுத்து பரிட்சார்த்த உறுப்பினர் மற்றும் கட்சி உறுப்பினரானார்.
மானாமதுரையில் சிப்காட் துவங்கப்பட்ட போது அங்கு ஒரு நிறுவனத்தை சுத்தானந்தம் துவக்கியிருக்கிறார். அதே காலத்தில் தஞ்சாவூரில் சேதுராமனுடன் சேர்ந்து (சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தினுடைய தலைவர்) ஒரு இன்ஜினியரிங் கம்பெனியை துவக்கியிருக்கிறார். இந்த கம்பெனியின் கட்டுமானப் பணி மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் மானாமதுரையில் அவர் ஆரம்பித்த சிறு தொழிலை மூடிவிட்டார்.
தஞ்சை நகரத்தில் இருந்த போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து மாவட்டச் செயலாளராக ஓராண்டு செயல்பட்ட தோடு, 6 ஆண்டுகள் மாநில பொருளாளராக செயல்பட்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் நடத்திய அறிவொளி இயக்கத் தில் 10 ஆண்டுகள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளராக இருந்து செயல்பட்டி ருக்கிறார். அறிவொளிக்கு முன்னோட்டமாக மாநில அளவில் நடைபெற்ற கலைப்பய ணத்தில் 10 நாட்கள் தொடர்ச்சியாகப் பங்கேற்றி ருக்கிறார். ஒரு கட்டத்தில் தான் பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் இருந்து முழுமையாக விலகிவிட்டார். அவருடைய பங்குதாரர் சேதுராமன், “வருமானத்திற்கு என்ன செய்வீர் கள்? தொடர்ந்து பங்குதாரராக இருந்து கொண்டு கட்சிப் பணி செய்யுங்கள்” எனக் கேட்டி ருக்கிறார். “என் தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகி. என் தந்தையின் வழியில் நானும் முழுமையாகக் கட்சிப் பணி ஆற்றப்போகிறேன். எல்.ஐ.சி முகவரான எனக்கு அதில் வரும் வரு மானத்தை வைத்து குடும்பத்தை நடத்திக் கொண்டு கட்சிப் பணி ஆற்ற முடியும்” எனக் கூறிவிட்டார்.
மேற்கண்ட பின்னணியில் கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வாகி 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டிருக் கிறார். இக்காலத்தில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக செயலாளராக செயல்பட்டதோடு, தோழர் ஜவஹர் (பல ஆண்டுகள் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக மாநிலக் குழு அலுவலராக செயல்பட்டவர்) அவர்களுடன் இணைந்து தீக்கதிர், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி போன்ற இதழ்களை தஞ்சை நகரத்தில் விநியோகம் செய்ததோடு, சந்தா தொகையையும் வசூல் செய்து அனுப்பும் பணியைச் செய்திருக்கிறார். தஞ்சையில் தோழர் ஜவஹரோடு இணைந்து மாநகராட்சி கட்டிடத்தில் ஒரு இடத்தைப் பெற்று பாரதி புத்தகாலயம் விற்பனை கிளையை துவங்கியவர் தோழர் சுத்தானந்தம். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த இவர் பேராவூரணி இடைக்குழுவிற்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். இக் காலத்தில் கட்சி நடத்திய எல்லா போராட்டங் களிலும் கலந்து கொண்டதை இப்போதும் பெருமையுடன் கருதுகிறார்.
2001ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் 15 சிறு குறு தொழில் முனைவோர் சீனாவிற்கு அனுப்பப்பட்ட னர். அந்தக் குழுவில் ஒருவராக சுத்தானந்த மும் சீனா சென்றார். சீனாவில் சிறுகுறு தொழில் களின் பிரம்மாண்டமான வளர்ச்சியை ஆய்வு செய்து, ஒரு விரிவான அறிக்கையை அன்றைய மத்திய அரசிடம் அளித்ததாகவும், ஆனால் மத்திய அரசு அதைப் பரிசீலிக்கவில்லை எனவும் சுத்தானந்தம் குறிப்பிட்டார். எல்.ஐ.சி முகவராக இருந்த தோழர் சுத்தா னந்தம் எல்.ஐ.சியின் தஞ்சை கோட்டத்தில் இருந்த 1500 முகவர்களைத் திரட்டி சங்கத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த சங்கத்தின் கோட்டச் செயலாளராக 2 ஆண்டுகள் செயல் பட்டார். தஞ்சை கோட்டம் உள்ளிட்டு தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் உள்ள நிலைமைகள் பரிசீலிக்கப்பட்டு அகில இந்திய அளவில் எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் (லிகாய்) உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் மாநிலச் செயலாளராக 12 ஆண்டுகள் செயல் பட்டிருக்கிறார். அகில இந்தியச் செயலாளர் களில் ஒருவராகவும் பணியாற்றி இருக்கிறார். தோழர் ஏ.வி.பெல்லார்மின் மக்களவை உறுப்பினராக இருந்த போது இச்சங்கத்தின் தென்மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் அவர் தலைவராகத் தொடர்ந்து வருகிறார். எல்.ஐ.சி முகவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்ற அடிப்படையில், மாநிலத்தின் எட்டு கோட்டங் களுக்கும் நேரடியாகச் சென்று சங்கப் பணியை சுத்தானந்தம் மேற்கொண்டு வந்தார். முகவர் சங்கத்தில் உள்ள தோழர்களை இடதுசாரி, முற்போக்கு சிந்தனைகளின் பால் ஈர்த்துள்ளார். பல மாவட்டங்களுக்குச் சென்று தொழிற்சங்க, அரசியல் வகுப்பும் எடுத்திருக்கிறார். மாநில அளவில் இச்சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 10000. இச்சங்கம் 1990இல் சி.ஐ.டி.யுவுடன் இணைக்கப்பட்டது.
அவர் முகவர்களை திரட்டத் துவங்கிய காலம் இன்சூரன்ஸ் துறை மீது அரசு தாக்கு தல் தொடுக்கிற காலமாகவும் இருந்தது. முகவர்களை எல்.ஐ.சி யைப் பாதுகாக்கிற போராட்டத்தில் இணைத்தார். பொதுத் துறை பாதுகாப்பு என்ற விரிந்த இயக்கத்திலும் முகவர்களை பங்கேற்கச் செய்தார். முகவர்கள் களத்திற்கு வந்ததால் இவ்வியக்கம் எல்.ஐ.சி அலுவலகங்கள் இல்லாத சிற்றூர், கிராமங்கள் வரை சென்றது. முகவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய ஸ்வரூப் குழு பரிந்துரைகள் வந்த போது அதற்கு எதிராக பெரும் அணி திரட்டலை செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. முகவர்கள் ஒரு போராட்ட சக்தியாக இவரது சீரிய தலைமையின் கீழ் உருவெடுத்தனர்.
2017இல் தோழர் சுத்தானந்தத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்ட போது மருத்துவர்கள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும், மாநில அளவில் பயணம் செய்து வேலை செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்கள். மேலும், அவருக்கு முடக்குவாத நோயும் ஏற்பட்டு விட்டது. இப்பின்னணியில், மாநிலப் பொதுச் செயலாளர் பணியில் இருந்து தோழர் சுத்தானந்தம் விடுவிக்கப்பட்டு தற்போது அதன் மாநிலத் தலைவராகவும் உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் கலாம் மாநிலச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.
தற்போது சங்கத்தின் மாநிலத் தலைவராக தாம்பரம் பகுதியில் கட்சிக் கிளை உறுப்பினராகவும் தன்னால் இயன்ற இயக்கப் பணிகளைச் செய்து வருகிறார். தனது இயக்க அனுபவத்தை பயணங்கள் முடிவதில்லை என்ற நூலாக பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் ஆவணப் படுத்தியுள்ளார். எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தின் சாதனைகள், போராட்டங்கள், மாநாட்டுச் செய்திகள் குறித்த கட்டுரைகளை தீக்கதிருக்கு எழுதி வருகிறார். செம்மலர், மகளிர் சிந்தனை இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் ஜென்னி மார்க்ஸ், தோழர் கார்ல் மார்க்ஸ், தோழர் ஏங்கல்ஸ் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவை Her Stories என்ற இணைய இதழில் சமீபத்தில் தொடராக வந்து முடிந்திருக்கிறது.
குடும்ப வாழ்க்கை:
தோழர் சுத்தானந்தத்தின் மனைவி விஜயலட்சுமி மானாமதுரையில் பிறந்தவர். அவர் எழுதிய சமையல் குறிப்புகள் ஆறு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவருக்கு நான்கு மகள்கள். மகள்களின் நான்கு திருமணங்களும் சீர்திருத்த முறையில் நடந்தன. இவரது மருமகன் தோழர் ந.சிவகுரு கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி, மகள்கள் எல்லோரும் கட்சி ஆதரவாளர்கள். இவரது கட்சிக் குடும்பம்.
தோழர் சுத்தானந்தம் கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக இயக்கப்பணி ஆற்றி வருகிறார். தமிழகத்தின் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 8000. முகவர்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி விட்டது. முகவர் சங்கத்தை உருவாக்குவதிலும் அதைப் பலப்படுத்துவதிலும் தோழர் சுத்தானந்தத்தின் பங்களிப்பு முக்கியமானது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனதில் இருந்து இன்று வரையில் தனது வாழ்க்கையில் எந்த நிலையிலும் அயராது கட்சிப் பணியையும் இயக்கப் பணியையும் சேர்ந்து செய்து இடைவிடாது இயங்கிகொண்டே இருப்பது அவரது சிறப்பு.
பொறியியல் படித்து பல நிறுவனங்களில் பணியாற்றிய அவர் தொழில் நிறுவனராக செயல்பட்டிருந்தால் வசதி வாய்ப்புகளோடு இருந்திருக்க முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மீது அவருக்கு ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக தொழில் வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு எல்.ஐ.சி முகவராக தான் ஈட்டும் வருவாய் போதும் என்று முடிவெடுத்து எல்.ஐ.சி முகவர் சங்கத்தை வலுப்படுத்தும் பணியிலும் இயக்கப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்,
தோழர் சுத்தானந்தத்தின் களப்பணி பாரட்டுக்குரியது. பின்பற்றத் தக்கது.