tamilnadu

மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு

சென்னை,மார்ச் 17- மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார். சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி ஆலோசனை நடத்தினார். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ஏ.ராமசாமி, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கவுரி, பதிவாளர் என்.மதிவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி,” தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கைக்கும், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கலாம்” என்றார். புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால்,  அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  ஆனால், புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான குறைபாடு கள்தான் உள்ளன. அவற்றைக் களைய வேண்டியது அவசியம். அதனால்தான் மாநில கல்வித் திட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில், மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழக முதல்வரின் திட்டமாகும். குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டம், எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறைதான். எனவே, இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கும், புதிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.