மதுரை:
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு குழு சார்பில் நவம்பர் - 26 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வேலை நிறுத்த ஆயத்த மாநாடு வியாழனன்று வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கில் ஏஐடியூசி டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. பெரியசாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. லெனின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதில் “டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் , காலமுறை ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் “ பணிநேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ( முன்பு இருந்ததுபோல் ) மாற்றி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 30 சதவீதம் வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கிட வேண்டும் . பணியாளர்களை இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைத்திட வேண்டும் . பணியாளர்களிடம் “ லாக்டவுண் “ குறைபாடு என்ற பெயரில் வசூலிக்கப்படும் அபராதத் தொகை மற்றும் ஜிஎஸ்டி- யை உடனடியாக கைவிட்டு , வசூலித்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் . கடைகளில் விற்பனையாகும் விற்பனைத் தொகையினை சென்னையைப் போல் வங்கிகள் மூலம் நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்யும் முறையினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்திட வேண்டும். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு வேலை வழங்க வேண்டும். அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கு தொமுச, சிஐடியு, ஏஐடியூசி, எல்எல்பி, டிஜிடிஇயூ, டிஎன் எஸ்/எஸ்டி, டியூசிசி, டிஎன்டிஎஸ்ஏ, டிடிபிஓ, டிஇயூ(மதுரை) ஆகிய தொழிற் சங்க மாவட்ட தலைவர், செயலாளர்கள் முன்னிலை வகித்தார்கள் , தொமுச டாஸ்மாக் சங்க மாநில பொதுச் செயலாளர் எம். சிவபிரகாசம் வரவேற்று பேசினார், தொமுச மாநில செயலாளர் வி. அல்போன்ஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், எல்எல்எப் மாநில பொதுச் செயலாளர் இ. முத்துப்பாண்டி, டிஜிடிஇயூ டாஸ்மாக் மாநில பொதுச் செயலாளர் ஜி. வி. ராஜா, டியூசிசி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். திருப்பதி, டிஎன்டிஎஸ்ஏ டாஸ்மாக் மதுரை மண்டல தலைவர் எஸ். சாமி, டிடிபிஓ டாஸ்மாக் மாநில பொதுச் செயலாளர் கே. ரமேஷ், டிஇயூ நிறுவனர் ஜி. தியாகராஜன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி . சிவக்குமார், தொமுச மாவட்ட துணைச் செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் நன்றி கூறினர்.