சென்னை, பிப். 26- நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மதுபான பார்களை அரசு மூட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழியர் சம்மேளனக் கூட்டம் மாநில துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.ராமு, ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் ஜி.சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்ப்பந்தம், துறை அமைச்சரின் சிபாரிசு காரணமாக நூற்றுக்கணக்கான பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பணி மாறுதலில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் ஊழலற்ற அரசு நிர்வாகத்தை அளிப்பேன் என்ற வாக்குறுதிக்கு விரோதமாக அதிகாரிகளும், துறை அமைச்சரின் அலுவலகமும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொது பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடைகளின் முன்னால் அமைக்கப்பட்ட தடுப்பு, பந்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவைக ளுக்கான செலவுத் தொகையை வழங்காமல் ஊழியர் தலையில் திணிக்கப்படுகிறது. மேலும், கடைகளை தூய்மைப்படுத்தி வர்ணம் அடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவுத் தொகையும் வழங்கவில்லை. ஊழியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை கடையின் மின்சார கட்டணம், சரக்கு இறக்கு கூலி என பல வகைகளில் செலவிடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, கடைக்கான பராமரிப்பு செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனம் கடைகளில் உள்ள மதுபான சரக்குகளை அடமானம் வைத்து 1,361 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு என்று சொந்தமான மது ஆலைகள் இல்லை.
எனவே மூலப்பொருள், உற்பத்தி செலவு என எந்த செலவும் கிடையாது. சில்லறை விற்பனையில் நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கடன் மற்றும் நட்டக் கணக்கு காட்டுகிறது. இது ஏற்புடையதல்ல. இப்படி கடன்கார நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனத்தை அரசு ஏன் நடத்த வேண்டும். சட்டத்தில் பொது இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை என்ற நிலையிலும், டாஸ்மாக் நிர்வாகம் பார் உரிமம் வழங்கியுள்ளதை ஏற்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் பார்களை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இதர சங்கங்களையும் இணைத்து, மாநிலம் முழுவதும் ஊழியர்களை திரட்டியும் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.