tamilnadu

அனைத்து அறிவிப்புகளும் இந்தி மொழியில்! உக்ரைனில் வட இந்தியர்களை மீட்பதற்கே முன்னுரிமை

திண்டுக்கல்,மார்ச் 6-  உக்ரைனிலிருந்து வட இந்தியர்களை மீட்பதற்கே முன்னுரிமை தரப்பட்டது என்றும் அனைத்து அறிவிப்புகளும் இந்தி மொழியிலேயே சொல்லப்பட்டன என்றும்  தமிழக மாணவி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களை மிட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக அரசும் ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவினர், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினர்.  

இந்நிலையில் உக்ரைனிலிருந்து  தமிழ்நாட்டின் கொடைக்கானலை சேர்ந்த மருத்துவ மாணவி அனுசியா மோகன் சனிக்கிழமையன்று நாடு திரும்பினார். அவர் கூறுகையில், அவரச கால கட்டத்தில் இந்திய அதிகாரிகள் வழங்கிய 10 எண்களும் செயல்படவில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளானோம். மேலும் வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.  உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்த சில நாட்களாக போராடினோம். தற்போது ஊர் திரும்பிய பின்னரே நிம்மதி அடைந்துள்ளோம். அங்கு தவித்து வரும் மற்ற மாணவர்களையும் விரைவில் மீட்க வேண்டும் என்று தெரிவித்தார்.