tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க  போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

திருச்சிராப்பள்ளி, மே 30-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சி பகுதியில், வெள்ளிவாடி கிராமத்தில் 47 வருடங்களாக பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய தொடர் போராட்ட முயற்சியாலும், வியாழனன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தின் விளைவாகவும், இரவோடு இரவாக அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு வந்து வீடு வீடாக பட்டாவை கொடுத்துவிட்டுச் சென்றனர்.  இதையடுத்து, அந்தப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் செங்கொடியின் பின்னால் திரண்டு நிற்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இது, நமது சங்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாலப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை 

பாபநாசம், மே 30-  அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி, காவிரி ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது.  பாலம் கட்டி ஒரு வருடம் கடந்த நிலையில், இன்றளவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பாலம் கட்டி முடிக்கவே 3, 4 வருடம் ஆன நிலையில், பாலத்தை இணைக்கின்ற சாலைப் பணி இன்னும் ஏன் முடியாமல் உள்ளது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. குடமுருட்டி ஆற்றின் மீதான பழைய பாலம், ஐம்பது ஆண்டுகளை கடந்த நிலையில், பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் பழுது என்பதோடு, பாலம் குறுகியது என்பதால் அடிக்கடி  போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி திறக்க உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகும். மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனம் செலுத்தி பால பணியை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று புதிதாக கட்டப்பட்ட காவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாத நிலையில், சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதால் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி வட்டாரத்தில் “உழவரை தேடி வேளாண்மைத் துறை”  திட்டம் துவக்க விழா

தஞ்சாவூர், மே.30-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், நாட்டாணிக்கோட்டை மற்றும் மாவடுகுறிச்சி கிழக்கு கிராமங்களில், வியாழக்கிழமை “உழவரைத் தேடி வேளாண்மைத் துறை” திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.  பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி வரவேற்றுப் பேசினார். தமிழக முதல்வர், ‘உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தை’ துவக்கி வைத்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. துவக்க விழாவில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத்துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சார்பதிவாளர், விதைச் சான்று அலுவலர், குருங்குளம் சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார்  நாட்டாணிக்கோட்டை மற்றும் மாவடுகுறிச்சி கிழக்கு ஆகிய கிராமங்களில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். இதில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் இத்திட்டம் தொடர்பாக சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், நாட்டாணிக்கோட்டை, மாவடுகுறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்றனர். இடுபொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு மானிய விபரங்கள், எடுத்துரைக்கப்பட்டன. தொழில்நுட்பம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டன. வேளாண்மை உதவி அலுவலர் கே.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தஞ்சாவூரில் 4 குளங்களில்  மீன்பிடி உரிமையை குத்தகைக்கு விட ஏலம்

தஞ்சாவூர், மே 30-  தஞ்சாவூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ்  இயங்கும், பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், புத்தூர் அய்யனார் குளம், பல்லவராயன் பேட்டை நரிக்குளம்  மற்றும்  கும்பகோணம் வட்டாரத்திலுள்ள பிடாரிகுளம் என்கிற கிராமிய செயல் விளக்கக்குளம்  ஆகியவற்றின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மே 29 அன்று முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.    ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம்.  தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு எண்-873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் – 613001 என்ற முகவரியில் இயங்கும்  மீன்வளம்  மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குநர்  அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  தொலைபேசி எண். 04362- 235389, மின்னஞ்சல்: adfthanjavur03@gmail.com, மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்கண்ட  இணையதளம் மூலமாக மட்டுமே  அறிவிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.