tamilnadu

கொள்ளிடம் அருகே

சீர்காழி, மே 31-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன்சரவணகுமார்(36). இவருக்கும் மணல்மேட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் திவ்யாவுக்கும்(28) திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் ஒன்றரை வயதில் கீர்த்தனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதமாக சரவணகுமார் மனைவி திவ்யாவை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த திவ்யா சம்பவத்தன்று காலை வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்தாராம். மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொள்ளிடத்தில் ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா இறந்தார்.இது குறித்து திவ்யாவின் தந்தை ராஜே ந்திரன்(58), கொள்ளிடம் காவல்துறையில் அளித்த புகாரில், எனது மகள் திவ்யாவை, கணவர் சரவணகுமார், அவரது தாய் பானுமதி, அக்கா சிவகாமி, மற்றும் சிவகாமியின் கணவர் பழனிச்சாமி ஆகிய நால்வரும் சேர்ந்து திவ்யாவைஅடித்து துன்புறுத்தி விஷ மருந்தை வாயில் ஊற்றி உள்ளனர்.எனது மகள் திவ்யா இறப்புக்கு காரணமான அவர்கள் நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி கொள்ளிடம் காவல்துறையை கண்டித்து காவல் நிலையம் எதிரே சிதம்பரம்- சீர்காழி நெடுஞ்சாலையில் திவ்யாவின்  உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் ஆய்வாளர் ராஜேந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.