திருநெல்வேலி, பிப். 27- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் வட்டப் பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம், ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ 10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இத்திட்டத்தை இந்தியா செயல்படுகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்களுக்கான எஞ்சின்களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப்பும் பரிசோதனை நடத்தப்படுகிறது. சி.இ.20 எனப்படும் கிரையோஜெனிக் என்ஜின் வாயிலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்விற்கான பரிசோதனை பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 2600 வினாடிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சி.இ.20 எனப்படும் எஞ்சின் 50 வினாடிகள் 720 வினாடிகள்,100 வினாடிகள என ஏற்கனவே 3 கட்டங்களாக பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4ஆம் கட்டமாக 100 வினாடிகளக பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனையை காணொலி காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் மகேந்திரகிரி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.