tamilnadu

வருவது இந்தியப் பெண்

அவள் முஸ்லிம் பெண்ணாக
இருந்து விட்டு போகட்டும்
அவள் அரிமாவைப் போல
தனித்து வருகிறாள் 
உங்களுக்கு எங்கே
சொல்லிக் கொடுத்தார்கள் 
கூட்டமாக சேர்ந்தால் 
குரைக்கச் சொல்லி!

பாரதியின் பராசக்தியைப் போல 
அவள் தலைநிமிர்ந்து வருகிறாள் 
கோழைகளே!
ஆயிரமாயிரமாய் திரண்டிருந்தும்
உங்களால் ஊளையிடத்தான் 
முடிகிறது ஓநாய்களே!

அவள் நெருப்பாற்றில்
நீந்தி வந்த சீதையைப் போல
சினம் கொண்டு வருகிறாள்
சில்வண்டுகளே!
வழி மறிக்கவும் விழி பிதுங்கி
ஜெய் ஸ்ரீராமை துணைக்கு 
அழைக்கிறீர்கள் இராவணர்களே!

அவள் அடிமை விலங்கொடித்த
வேலு நாச்சியாரைப் போல
வீறுகொண்டு வருகிறாள் மூடர்களே! 
முடிந்தால் உங்கள் மோடியிடம்
போய் சொல்லுங்கள்
இங்கே கறுப்பு அங்கி அணிந்த 
வனதுர்க்கை எட்டு கைகளுடன் 
வந்து கொண்டிருக்கிறாள் என்று!

அவள் புத்தகத்தை கையிலேந்தி 
அறச்சீற்றத்துடன் ஆர்ப்பரித்து 
கண்ணகிபோல் வருகிறாள் கயவர்களே!
பாண்டியன் நெடுஞ்செழியனாக 
நெடுஞ்சாண்கிடையாக
உங்கள் கொடுங்கோலாட்சியும் 
வீழ்ந்து போகும் வீணர்களே!

உணவு எங்கள் பிறப்புரிமை
உடை எங்கள் பிறப்புரிமை
மொழி எங்கள் பிறப்புரிமை
வாழும் வழி எங்கள் பிறப்புரிமை 
என அவள் முழக்கமிட்டு வருகிறாள்

அவள் முஸ்லிம் பெண்ணாக
இருந்து விட்டு போகட்டும்
அவள் இந்தியப் பெண்
அவள் அணிந்த புர்காவை
கழற்றச் சொல்ல நீங்கள் யாரடா
இட்லரின் வழிவந்த எருமை மாடுகளா!

வரத.இராஜமாணிக்கம், பழநி