tamilnadu

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 வெறும் உறுமலல்ல 

411 பன்றிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எழுப்பிய வெவ்வேறு விதமான 7000ஓசைகளை பயன்படுத்தி அல்கோரிதம் ஒன்றை அறிவியலார்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.இந்த ஓசைகள்  அவைகளின் உணர்ச்சிகளை காட்டுகின்றதாம். அதிக ஏற்ற தாழ்வு இல்லாத குறுகிய சத்தங்கள், மகிழ்ச்சி உற்சாகம் ஆகிய நேர்மறையான உணர்வுகளைக் காட்டுகின்றதாம். அதிக அதிர்வலைகள் கொண்ட நீண்ட ஓசைகள் பயம், அழுத்தம் ஆகிய எதிர்மறை உணர்வுகளைக் காட்டுகிறதாம். 

2 பாத்திரங்கள் துலங்கும்! கிருமிகள் பெருகும்! 

சமயலறையில் பாத்திரம் விளக்கப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகளில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் வசிக்கலாம் என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லிங்க் சாங் யூ. அவருடைய குழு 6 முதல் 1536 வரை துளைகள் உள்ள வெவ்வேறு தட்டுகளில் பலவகையான நுண்கிருமிகளை 30 மணி நேரம் சேர்த்து வைத்தனர். ஆறுதுளை தட்டுகளில் சில வகை கிருமிகளும் 1536 துளைத்தட்டுகளில் வேறு சிலவகை கிருமிகளும்  பிழைத்தன. ஆனால் சமையலறை ஸ்பாஞ்சுகளை ஒத்த துளைகள் உள்ள தட்டுகளில் பலவகையான கிருமிகள் பிழைத்திருந்தன. உணவுத் துணுக்குகளும் ஈரமான உள்பகுதிகள் மட்டுமல்லாமல் நுண்கிருமிகள் வளர வசதியான தடுப்பறைகள் கொண்டதுமாக ஸ்பாஞ்சுகள் இருப்பதுவே இதற்குக் காரணம் என்கிறார் இந்த ஆய்வாளர்.

3 ஐரோப்பாவில் ஒரு உ.வே.சா இருந்திருந்தால் 

மத்திய காலத்தை சேர்ந்த ஐரோப்பிய இலக்கியப் படைப்புகளில் எவ்வளவு அழிந்துவிட்டன என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 9 சதவீதமே இன்றுவரை எஞ்சியுள்ளனவாம். இந்த ஆய்வின் தலைவரான பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்  கெஸ்டோமான்ட்டும் (Mike Kestemont) அவரது குழுவினரும் ஒரு புள்ளிவிவர முறையைக் கடைப்பிடித்து  இதனைக் கண்டறிந்துள்ளனர். கணக்கெடுப்புகளில் விடுபட்டுப் போகின்ற வகைமைகளை கண்டறியும் முறையை தைவான் நாட்டு சுற்றுச்சூழல் புள்ளிவிவர பேராசிரியர் ஆன்னி சாவ் ஏற்படுத்தியுள்ளார். அதனையே இவர்கள் இந்த ஆய்வில் கையாண்டுள்ளனர். இதன்படி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு  மொழிகளில் இருந்த 1170 கதைகளில் இன்று 799மட்டுமே கிடைத்துள்ளன. இவைகளைப் பற்றிக் கூறும் 40614 மூலப் பதிவுகளில் இன்று 3648பதிவுகளே கிடைத்துள்ளன என்று மதிப்பிடப்படுகிறது. அழியாத தோல்  ஆவணங்கள் சிறிய பெட்டிகள் அல்லது அதைப் போன்ற பயன்பாட்டுகளுக்கு மறு சுழற்சி செய்யப்பட்டு விட்டன. கையெழுத்துப் பிரதிகளின் பகுதிகள் பாதிரியாரின் தலைப்பாகையில் பொருத்தப்பட்டும் அழிக்கப்பட் டுள்ளன. ஜெர்மனி, அயர்லாந்து, ஐஸ்லாந்து ஆகியவற்றை சேர்ந்தவற்றில் முக்கால் பங்கும் டச்சு, பிரெஞ்சு ஆகியவற்றில் அரைப்பங்கும் இங்கிலாந்து நாட்டு படைப்புகள் 38 சதவீதம் மட்டுமே ஒரு ஆவணத்திலாவது எஞ்சியுள்ளன. பொதுமக்களால் உண்டாக்கப்பட்டதும் கையால் எழுதப்பட்டதுமான சாகசக் கதைகளும் காதல் கதைகளும் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளனவாம். இதனோடு ஒப்பிடும்போது இலக்கியப் படைப்புகள் அதிக அளவில் பிழைத்திருக்கின்றன. 

4 ஓசோனும் மன அழுத்தமும் 

வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி ஆலைகள்  வெளிவிடும் மாசுபடுத்தும் ஓசோன் வாயுவை சுவாசிக்கும் இளம் பருவத்தினர் மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 9 முதல் 13 வயது வரை உள்ள 213 இளம்பருவத்தினரை சோதித்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவு ஓசோன் வாயு சூழ்ந்த பகுதிகளில் வாழும் இளம்பருவத்தினர் சோகம், தூக்கச் சீர்குலைவு, தற்கொலை சிந்தனைகள் ஆகிய உணர்வுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன னராம்.  

5  ஜீன் திருத்தல் பயனுள்ளதா?

அழிந்துவிட்ட இனங்களை மீண்டும் உருவாக்க மரபணு திருத்தம் (gene editing) என்கிற உயிரியல்  தொழில்நுட்பம் அதிகம் பயன்படுகிறது. குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மிகச் சரியான பிரதி உருவாக்கப்படுகிறது1 .ஆனால் ஜீன் திருத்தல் முறையில் அழிந்துபட்ட விலங்கை கிட்டத்தட்ட ஒத்த ஒன்றைத்தான் படைக்க முடியுமாம். கில்பர்ட்  என்பவரும் அவரது குழுவினரும் அழிந்துவிட்ட நார்வே பிரவுன் எலியை இப்போது உள்ள கிறிஸ்மஸ் ஐலேண்ட் எலியின் மரபணுவை திருத்துவதன் மூலம் உருவாக்கியுள்ளார்கள். கிட்டத்தட்ட 95 சதவீத நார்வே பிரவுன் எலியை இது ஒத்திருக்கிறதாம்.ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முகர்தலைக்  கட்டுப்படுத்தும் பகுதிகள் வேறுபட்டு உள்ளன. எனவே புதிய விலங்கு பழைய வாழ்விடத்தில் விடப்பட்டால் பிழைப்பது  கடினம். இந்த சோதனை மூலம் ஜீன் திருத்தலில் எது கிடைக்கும் எது கிடைக்காது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்கிறார் கில்பர்ட். உயிரினங்கள் பாதுகாப்பு துறையில் இது பயன்படலாம். ஆனால் இப்போதுள்ள காண்டா மிருகங்களை பிழைத்திருக்க வைக்க முடியாத நிலையில் ஆய்வுக்கான  பணத்தை செலவிட இது சரியான வழிதானா என்கிற கேள்வியும் எழுகிறதாம்.  

6 மோதலில் உண்டான புவியியல் அமைப்பு 

பூமியில் 214 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய புவியியல் அமைப்பின் புகைப்படங்களை பன்னாட்டு விண்வெளி நிலைய வீரர் கயலா பர்ரோன் வெளியிட்டுள்ளார். ஐந்து கிலோமீட்டர் விட்டமுள்ள ஒரு எரிகல் வினாடிக்கு 17கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் மீது மோதியதால் இது உண்டானதாம். இந்தப் பகுதி கனடா நாட்டின் கியூபெக் பகுதியில் உள்ள மேனிகவுகன் நீர் தேக்கமும் லேவாஸ்ஸர் தீவும் கொண்டது . நமது புவி மண்டலத்தின் வரலாற்றில் அறியப்பட்ட  ஐந்தாவது சக்திவாய்ந்த மோதலாகும்.