உலகைத் திருத்தவே வந்தார்-மக்கள்
ஒன்றாக சன்மார்க்க சங்கமே தந்தார்!
விலக மதமொடு சாதி -நெஞ்சில்
விளங்கவே அருட்பா பாடினார் ஆதி!
சன்மார்க்கத் தொண்டர்கள் கூடி-அருட்பா
தந்திடும் கொள்கைப் பரப்பினார் ஓடி!
தங்காத பசிப்பிணி போக்க-தருமச்
சாலை அடுப்பினை மூட்டினார் நீக்க!
தேடிடும் ஆண்டவன் எங்கே-என்று
தேடிடு வார்க்குசபை கட்டினார் அங்கே
வாடிடுவோர் வாட்டங்கள் தீர்த்தே-இயற்கை
வளர்க்கும் உயிர்களைப் போற்றினார் சேர்த்தே!
வாழ்ந்திடு வார்க்கேது சாவு-சித்தி
வளாகம் வளர்த்திடும் சிந்தனை தாவு!
வாழும் உயிர்களில் தேடி-கருணை
வாழ்ந்திடும் ஆன்ம நேயமே நாடி!
வள்ளலார் தந்திடும் அறிவை-ஏற்று
வாழ்ந்திடு வாழ்வில் தந்திடும் நிறைவை!
உள்ளத்தில் ஆர்வம் கொள்வாய்-நன்மை
ஓடியே வந்திடும் உளத்திலே வெல்வாய்!
- புலிகரம்பலூர் பொன்னையன்