tamilnadu

img

புல்டோசர் அரசியலுக்கு பின்னால் சங்பரிவாரின் வகுப்புவாத செயல்திட்டம்: பிருந்தா காரத்

கோழிக்கோடு, ஜுன் 6- புல்டோசர் அரசியலுக்கு பின்னால் சங்பரிவாரின் வகுப்புவாத செயல்திட்டம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். கோழிக்கோடு தாகூர் அரங்கில் அரசமைப்பு சாசன பாதுகாப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை அவர்  தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில்,  சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்களை குறிவைத்து சங்பரிவார் செயல்படுகிறது. அரசமைப்பு மதிப்புகள் மற்றும் மதச்சார்பற்ற வரலாற்றிற்கு எதிராக புல்டோசர் எழுகிறது. சங்பரிவார் போலி தேசியம் என்ற போர்வையில் உண்மையான தேசியத்தை அபகரித்து வருகிறது. இந்துக்கள் மட்டுமே தேசபக்தர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஒரு வரலாற்று மறுப்பு. பிரித்து ஆளும் காலனித்துவ உத்திக்கு ஆர்எஸ்எஸ் பக்கபலமாக இருந்தது.

இரு நாடுகள் வாதம் முதன் முதலில் 1937 இந்து மகா சபையில் வி.டி.சாவர்க்கரால் எழுப்பப் பட்டது. முகமது அலி ஜின்னா 1940இல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் இதை ஒப்புக்கொண்டார். ஆனாலும்,  மதச்சார்பின்மையை நிலைநிறுத்தி நாடு சுதந்திரம் பெற்றது. பூர்ணா ஸ்வராஜ் பற்றிய யோசனை முதன்முதலில் 1921 காங்கிரஸில் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மவுலானா ஹஸ்ரத் மொஹானியால் முன்வைக்கப்பட்டது.  பெஷாவர் சதி வழக்கில் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் சமூகத்தைச்  சேர்ந்தவர்கள். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர் முகமது அக்பர். அப்போது ஆர்.எஸ்.எஸ்., இந்து தேசத்துக்காக வாதிட்டு இந்த ஒற்றுமையை அழிக்க முயன்றது. ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் இந்தியாவை ஒன்றாக வைத்திருக்கும் இரண்டு பெரிய தூண்கள். அதை உடைக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.  இந்திய  அரசமைப்பு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆனால் சங்பரிவார் அதை நம்பவில்லை. அவர்களின் சாசனம் மனுஸ்மிருதி. “சமத்துவமின்மை தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்”  என்று பிருந்தா காரத்கூறினார்.