tamilnadu

img

பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இன்டர் சிட்டி ரயில் இயக்குக!

ரயில்வே ஆலோசனை கூட்டத்தில்  பி.ஆர்.நடராஜன் எம்பி., கோரிக்கை

கோயம்புத்தூர், பிப்.23- பொள்ளாச்சி வழியாக மதுரை நகருக்கு செல்ல ஏதுவாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு இரயில்வே சார்பில் வியாழனன்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், சேலம் கோட்ட இரயில்வே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்,  தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெற்கு இரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக இக்கூட்டத்தில், கோவை மாவட்ட இரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், “பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை இணைத்து புதிதாக கோவை இரயில்வே கோட்டம் அமைத்திட வேண்டும்.‌ பொள்ளாச்சி வழியாக நாகர்கோவில், ராமேஸ்வரத்திற்கு தினசரி இரயில் விட வேண்டும். பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இண்டர்சிட்டி இரயில்கள் விட வேண்டும். கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர இரயில் விட வேண்டும்.

சிங்காநல்லூர், இருகூர் இரயில் நிலையங்களில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு நின்று சென்ற இரயில்கள் தற்போது நிற்பதில்லை, ஆகவே இனி வரும் நாட்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகோவை இரயில் நிலையத்தில் மின்தூக்கி வசதி ஏற்பாடு செய்திட வேண்டும். வடகோவை இரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரையிலான நடைபாதை மேம்பால பணிகள் உடனே துவங்கி முடிக்க வேண்டும். கோவையில் நடைபெற்று வரும் இரயில்வே சுரங்கப் பாதை மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  ஏற்கனவே உள்ள சுரங்கப் பாதைகளை தேவைக்கு ஏற்ப அகலப்படுத்துவது அல்லது கூடுதல் பாதை அமைக்கும் பணி துவங்கப்பட வேண்டும்” என கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.  இதேபோன்று இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் தொகுதிக்குட்பட்ட இரயில்வே சேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.