tamilnadu

img

குமரியில் கடும் வெயில் : ரப்பர் பால் உற்பத்தி குறைவு

நாகர்கோவில், ஆக. 23- குமரி மாவட்டத்தில் கடும்  வெயில் அடித்து வருவதால் ரப்பர்  மரங்களில் பால் உற்பத்தி குறைந்து  வருகிறது. அத்துடன் ரப்பர் ஷீட்டின் விலையும் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ரப்பர் மரங்களைப் பொறுத்த வரை தொடர் மழை பெய்தாலும் பால் வடிக்க முடியாது. அதே வேளையில் மழை பெய்யாமல் நிலம் வறண்டாலும் மரங்களில் இருந்து பால் கிடைக்காது. மாவட்ட த்தில் இலையுதிர் காலத்திற்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு தொடங்கப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களில் மிதமாக மழை  பெய்து வந்ததால் ரப்பர் மரங்களில் இருந்து இயல்பான அளவுக்கு பால் கிடைத்து வந்தது. இந்தநிலையில் தென்மேற்குப் பருவமழை பெய்யாததால் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் நிலவி  வருகிறது. இதனால் அணைகள், ஆறுகள், குளங்கள் வறண்டு, பயிர்களும் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரப்பர் பால்  உற்பத்தியும் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட ரப்பர்  வாரிய மார்த்தாண்டம் வளர்ச்சி அலுவலர் கே. முரளி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதற்காக ரப்பர் மரங்களில் பால்வடிப்பை நிறுத்தக்கூடாது. மரங்களில் வழக்கமான பால் வடிப்பு செய்யா மல் 4 நாள்களுக்கு ஒரு முறை  பால் வடிப்பு செய்ய வேண்டும். தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. மேலும் தோட்டக் கலைத் துறை மூலம் மானியத்துடன் கூடிய சொட்டுநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தலாம். மரங்களில் மூடு பகுதிகளில் வெப்பம் தாக்காத வகையில் சருகுகளைக் கொண்டு மூடி வைக்கலாம் என்றார்.