மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் சார்பில், விஜயதசமியையொட்டி தென் மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களாக இந்த மனுவின் மீது அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து விரிவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.இளங்கோவன் முன் செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் அக்.27 இல் மருது சகோதரர்கள் குருபூஜையும், அக்.30 இல் தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன. இதற்காக அக்.24 ஆம் தேதி முதல் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, அக்.30-க்குப் பிறகு அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என அரசுத் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க முடியவில்லையெனில், தமிழகத்தில் அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்கலாம் என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன. அங்கெல்லாம் ஒன்றிய அரசு அவசர நிலையை அறிவிக்க எதிர் தரப்பு கோரிக்கை வைக்குமா? என அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பு வாதமும், முடிந்துவிட்டதால் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று நீதிபதி இளங்கோவன் வழங்கினார்.
அதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. பிற மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.