கடைகளை அடைக்க சாலையோர வியாபாரிகள் சங்கம் முடிவு
மன்னார்குடி, ஜுன் 26- ஜூலை 9 அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தில் கடையடைப்பு செய்து முழுமையாக பங்கேற்பது என சாலையோர வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சந்தியாகு தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு முடிவுகளை விளக்கி சிஐடியு மாநில துணைத் தலைவர் தெய்வராஜ் பேசினார். வேலை அறிக்கையை முன்வைத்து மாநில கன்வீனர் பி. கருப்பையன் பேசினார். கூட்டத்தில் செல்வி, மோகன், தண்டபாணி, ரகுபதி, தாயுமானவன், ராமச்சந்திரன் உள்ளிட்டு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெறவேண்டும். குறைந்தபட்ச கூலி ரூ.26 ஆயிரம் என தீர்மானிக்க வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.