பாஜகவின் புதிய கண்டுபிடிப்பாக ரோடு ஷோ மாறியிருக்கு. மாற்றப்பட்டிருக்கு. தமிழ்நாட்டில் மேடைகள் போட்டு கூட்டம் கூட்ட முடியாமல் ஏமாந்து போன பாஜகவின் உத்திதான் ரோடு ஷோ. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் என வரிசை கட்டி தமிழ்நாட்டில் ‘ஷோ’ காட்டு கிறார்கள். இந்த ஷோவுக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். பிறகு ஏன் இந்த ரோடு ஷோக்கள்? யாருக்காக ரோடு ஷோக்கள்... பாஜகவினர் மலைபோல் நம்பியிருக்கும் வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்களில் தாமரைக்கான ஆதரவு தள்ளாடு கிறது- தத்தளிக்கிறது- சரிகிறது... அது மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. அதனைத் தூக்கி நிறுத்திவிடலாமா என்ற நப்பாசையில் தான் தெற்கே ரோடு ஷோ காட்டுகிறார்கள். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்குப் பொங்கி வழிவதுபோல் திட்டுத் திட்டாகப் படங்களைப் பிடித்து... அதையெல்லாம் வடக்கே ஓடுகிற டிவிக்களில் போட்டு சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டு வளர்ச்சி என மாயத்தோற்றம் காட்டி மயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்த ஷோக்கள். ஆனால் 10 ஆண்டுகளாக வளர்ச்சி வளர்ச்சி என்று சொன்ன பம்மாத்து செய்த எதுவும் பஞ்சைகளின் வீடுகளுக்கு வரவில்லை என்று உணர்ந்துவிட்டார்கள் என்பது பாவம்! அவர்களுக்குத் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதை தெரிய வைக்கும். தெளிவுபடுத்தும்.
- மயிலைபாலு