எந்த நேரத்திலும் இடிந்து விழும் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு
உடனே நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாபநாசம், ஜூன் 4 -
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில் அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் பழுதடைந்து, எந்நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி இடிந்த நிலையில் உள்ளது. இங்கு பணியில் உள்ள ஆர்.ஐ.யும் உயிர் பயத்துடன் பணிபுரிய வேண்டிய அவலநிலை உள்ளது.
இந்த கட்டடத்திற்கு அய்யம்பேட்டை, பசுபதிகோயில், சூலமங்கலம், செருமாக்கநல்லூர், பெருமாக்கநல்லூர், வையச்சேரி, புரக்குடி, உள்ளிக்கடை, இலுப்பக்கோரை, கணபதி அக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, ஈச்சங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொது மக்கள் பல்வேறு சான்றுகளுக்காக வந்து செல்கின்றனர்.
கட்டிடம் பழுதடைந்திருப்பதால், மழை நாட்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் ஒழுகுகிறது. கபிஸ்தலம், மெலட்டூர், அம்மாப்பேட்டை வருவாய் ஆய்வர் குடியிருப்பு கட்டடங்கள், புதிதாக கட்டப்பட்ட நிலையில், 30 ஆண்டுகளான அய்யம்பேட்டை வருவாய் ஆய்வர் குடியிருப்பு கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக தரமாக கட்ட வேண்டும்.
இதேபோன்று பாபநாசம், சாலியமங்கலத்திலும் புதிதாக வருவாய் ஆய்வர் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.