tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டவிதிகளை மதித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்க -சிபிஎம்

போதிய நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைஅமல்படுத்தவும்,
கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டுமென
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 23-வது மாநில மாநாடு வலியுறுத்திக் கோருகிறது.
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் (2016) அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகள்
பயன்படுத்தும் வகையில் அரசு பொதுக்கட்டிடங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டவிதி
அமலாகவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து, தகவல் தொடர்பு
சாதனங்களும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட வேண்டும், அனைத்து வறுமை
ஒழிப்பு சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட கூடுதலாக 25 சதவிகிதம் நிதி ஒதுக்க
வேண்டும், உணவு ப்பாதுகாப்பு சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி 35கி உணவு
தானியத்துக்குரிய அந்தியோதயா அன்னயோஜன குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும், தனியார்
துறைகளில் 5 சதவிகிதம் வேலைகளை பெற்றுத்தர வேண்டும், பல்நோக்கு அடையாள சான்று
வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மற்றும் மாநில நிதியம் உருவாக்குதல்
உள்ளிட்ட சட்டவிதிகள் இருந்தும், இச்சட்டவிதிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மதிக்காத
காரணத்தால் அமலாகவில்லை என்பதை சிபிஐ(எம்) 23-வது மாநில மாநாடு வேதனையோடு
சுட்டிக்காட்டுகிறது.
2014 ஆம்ஆண்டு ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நரேந்திர மோடி தலைமையிலான
பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளை தெய்வப் பிறவிகள் என நாமம்சூட்டி அத்துறையின்
பெயரையே அதிகாரப்பூர்வமாக மாற்றி மோசடி செய்ததே தவிர, அவர்களது சட்ட உரிமைகள்
மற்றும் ஐ.நா. உடன்படிக்கை உரிமைகள் (2007) விதிகளை அமல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி சுருக்குகிறது.
உதாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊன்றுகோல் உள்ளிட்ட
அங்க அவையங்கள் உற்பத்தி செய்யும் ஒன்றிய அரசின் “அலிம்கோ” நிறுவனத்துக்கு கடந்த
ஆண்டு ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில் 2022-23 நிதியாண்டுக்கு மிகமோசமாக ரூ.10 லட்சம்
மட்டுமே ஒதுக்கி மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தும் வேலையை செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் நலன், மாநில அரசின் பொறுப்பு என்ற முறையில் அண்டை
மாநிலங்களுக்கு ஈடாக, மாதாந்திரஉதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000 ஆக உயர்த்தி
வழங்க வேண்டும். முதுகுதண்டுவடம், தசைச்சிதைவு உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளாகி
படுக்கையிலேயே கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆக உதவித்தொகையை உயர்த்தி
வழங்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கோருகிறது.
கிராமப்புற 100நாள் வேலைதிட்டத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களில் கூடுதல் அளவு வழங்க
வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் சட்டவிதியை பயன்படுத்தி குறைந்தபட்சம் அவர்கள் இடம்

பெற்றுள்ள குடும்பங்களுக்கு 125 நாட்களாக உயர்த்தியும், முழுமையாக வேலை வழங்கவும்
அரசாணை 52 மற்றும் ஊரகவளர்ச்சி ஆணையரின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக
அமல்படுத்தவும், ஊராட்சிமன்ற தலைவர்களின் சட்டவிரோத தலையீடுகளை தடுக்கவேண்டும்,
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களது
போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் தமிழக அரசை மாநாடு
வலியுறுத்திக் கோருகிறது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களைப் போன்று நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகளில்
மாற்றுத்திறனாளிகளை நியமன பிரதிநிதிகளாக அமர்த்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு வலியுறுத்திக் கோருகிறது.
முன்மொழிபவர் : என்.நம்புராஜன்
வழிமொழிபவர் : பாரதி அண்ணா