தென்னையை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையம் தேவை
முதல்வருக்கு கோரிக்கை
தஞ்சாவூர், ஜுன் 21- தென்னையைத் தாக்கும் பல்வேறு நோய்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த, பேராவூரணி பகுதியில் முழுநேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தென்னை உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளருமான மல்லிப்பட்டினம் கமால்பாட்சா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தென்னையில் வாடல்நோய், சிவப்புக் கூன் வண்டு, ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ தாக்குல் உள்ளிட்ட நோய்களால், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால், தென்னை விவசாயிகள் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்னையை தாக்கும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய, பேராவூரணி தொகுதியில் முழுநேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்காடிகளில் குடும்ப அட்டைகளுக்கு பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தேங்காயின் விலை வீழ்ச்சியடையாமல் தென்னை விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.