tamilnadu

img

வாடகை சைக்கிள்

துரை ஆனந்த் குமார்

அந்த நகராட்சி வேன் மழை நீரை இருபுறமும் வாரியடித்தபடி வந்து கொண்டு இருந்தது. ஓட்டுநர், நகராட்சி ஊழியர் ஆகியோருக்கு இடையில் 10 வயதான இனியன் அமர்ந்திருந்தான். “எந்த இடம் தம்பி” என்றார் ஓட்டுநர். “அங்கதாங்கணா” என்று அவன் காட்டிய இடத்திற்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தினார். மற்ற ஊழியர் இறங்கிப் போய் பார்த்துவிட்டு ஆமா இங்கதான் என்று சத்தமிட்டார். அவர் காட்டிய இடத்தில் மழை நீர் வட்டமாக சுழித்தபடி உள்ளே இறங்கிக் கொண்டு இருந்தது மழை நீரின் ேகத்தில் அந்த பாதாளச் சாக்கடையில் மூடி எங்கு போனதோ? இப்போது அது ஒரு திறந்த குழியாக இருந்தது. வேனிலிருந்து இறங்கிய புதிய மோடியை அங்கே வைத்து இறுக்கமாக மூட சில நிமிடங்கள் பிடித்தன. திரும்பச் செல்லும் போது “நல்ல வேலை செஞ்ச தம்பி. கொட்டுர மழையில நாம அலுவலகத்துக்கு சைக்கிள்ல வந்து தகவல் சொன்ன” என்று ஓட்டுனர் பாராட்டிய போது தான் அவனுக்கு சுருரென்றது. சைக்கிள்!! அதை எப்படி மறந்து போனான்? வேன் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று நின்றதும் பாய்ந்து இறங்கி சுற்றிலும் பார்த்தான். மற்ற எல்லா வாகனங்களும் இருந்தன. சைக்கிளை மட்டும் காணவில்லை.

இனியனின் நெஞ்சம் படபடத்தது. வாடகை சைக்கிள் கடை வைத்திருந்த சிடுமூஞ்சித் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வது?  வீட்டின் வறுமையால் சைக்கிள் என்பதை இனியனுக்கு எட்டா கனவு தான். எப்போதாவது கிடைக்கும் சில்லறைகளை சேர்த்து வைத்துக்கொண்டு சைக்கிள் கடைக்கு ஓடுவான். அங்கு குட்டி சைக்கிள் வாடகைக்குக் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு மூன்று ரூபாய். தாத்தாவின் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. “சிடுமூஞ்சி தாத்தா” தான் சிரிக்கவே மாட்டார். இடது காலை விந்தி விந்தி நடப்பார். சரியாக ஒரு மணி நேரத்தில் சைக்கிளை திருப்பித் தந்து விட வேண்டும். தாமதமானால், இரண்டு மணி நேரத்திற்கு உண்டான வாடகையைத் தர வேண்டும் என்று கறார் காட்டுவார். இப்போது என்ன செய்வது? தயங்கி தயங்கி சைக்கிள் கடையை அடைந்தவன், “தாத்தா, தெரியாம சைக்கிளைத் தொலைச்சிட்டேன்” என்ற போது உதடு துடித்து, கண் கலங்கவே ஆரம்பித்தது. தாத்தா, “சைக்கிள் தொலையல தம்பி. சாக்கடை திறந்து கிடந்ததைப் பார்த்துட்டு, நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் சொல்லப் போனேன்; அங்க நம்ம சைக்கிள் இருந்துச்சு எடுத்துட்டு வந்துட்டேன். நீ எனக்கு முன்னாலே சாக்கடை பற்றி தகவல் சொன்னாயாம்ல! நீ வாடகை ஒன்னும் தர வேணாம்!” என்று புன்னகைத்தார். “என்ன தாத்தா சொல்றீங்க?” ”நான் சின்ன பிள்ளையா இருந்தபோது உன்ன மாதிரி யாராவது தகவல் சொல்லி இருந்தா சாக்கடையில் விழுந்து என் கால் எப்படி ஆகியிருக்காது” என்று தன் இடது காலை காட்டிவிட்டு, “பரவாயில்லை! இந்த காலத்தில் சின்ன பசங்களை நல்ல பொறுப்பா இருக்கீங்க” என்று மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்தார். தாத்தாவுக்கு இவ்வளவு அழகாக சிரிக்கவும் தெரியும் என்று இனி என் வியந்து போனான்.