tamilnadu

img

ராஜி என் கண்மணி தமிழ்த் தன்மையோடு உருவான சாப்ளினின் காதல் கதை...

நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் சினிமா கதையாடலின் உள்ளடக்கமானது நாயகன் - நாயகி - வில்லன் ஆகிய முக்கோண அடிப்படைப் பாத்தி ரங்களை நம்பியே இன்னமும் சுற்றிக்கொண்டி ருக்கிறது.  இதில் சம்பவங்களையும், பின்னணியை யும் பெயர்களையும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டுவிட்டால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுப்படமாகிவிடுவதும் விந்தை தான். அல்லது வெளிப்படங்களைப் பார்த்து,  அதன் கதையைக் கொஞ்சமாகவோ நிறையவோ  உல்டா பண்ணியும் நமக்கும் புதுப்புதுப் படங்கள் கிடைக்கிற வாய்ப்புகளை உண்டு பண்ணிக் கொள்ளலாம். அப்படி நடந்த ஒரு முயற்சிதான் “ராஜி என் கண்மணி” - என்னும் ஒரு தமிழ் சினிமா. அது நடந்தது 1954 ஆம் ஆண்டில். ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகி யாகப் பணியிலிருந்தவர் கே.ஜே.மகாதேவன்.  சென்னையிலும் லண்டனிலும் படித்த அவருக்கு சினிமாவின்மீது தீராத மோகம். முதலில் கே.சுப்பிரமணியத்தின் தியாக பூமியில் கதா நாயகனாக நடித்தார் மகாதேவன். அப்புறம்தான் ஜெமினியில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர்  இயக்கத்தில் உருவானதுதான் இந்த ராஜி என் கண்மணி.

ஹாலிவுட்டில் சினிமா பேசத்தொடங்கியது 1927 ல். ஆனாலும், 1931 ல் வெளிவந்த சார்லி சாப்ளினின் “சிட்டி லைட்ஸ்” பேசவில்லை. பின்னணி இசை மட்டும் சேர்க்கப்பட்டு வெளி வந்தது. பலரும் சாப்ளினைக் கடுமையாக விமர்சித்தார்கள். சிட்டி லைட்ஸ் படத்தைப் பேசும்படமாக உருவாக்கச் சொன்னார்கள். ஆனால், சாப்ளினுக்கு ஏனோ மௌனப் படத்தின் மீதே பெரும் காதல் இருந்தது.  அதனால் சினிமா பேசத்தொடங்கி யிருந்தபோதும் அவர் பேசாப் படத்தை எடுத்தார். அது வெற்றிபெறாது என்றார்கள் சினிமா விமர்சகர்கள். அதையெல்லாம்மீறி சிட்டி லைட்ஸ் பெருவெற்றி பெற்றது. சாப்ளினின் நகைச்சுவையோடு அழுத்தமான காதல் காவியமாகவே அது அவரின் புகழுக்கு மகுடம் சேர்த்து நின்றது. அந்தப் படத்தின் கதையை அப்படியே தமிழ் சினிமாத்தனத்துடன் கொடுத்தார்கள் ஜெமினி நிறுவனத்தார். சாப்ளின் சிட்டி லைட்ஸ் படத்தில் ஏற்ற ஒரு நகரத்து நாடோடிப் பாத்திரத்தைத் தமிழில் டி.ஆர்.ராமச்சந்திரன் செய்தார். நகைச்சுவையில் சோபித்துவந்த அவ ருக்கும் இதுதான் முதல் முழுநீள குணச்சித்திர வேடம். தியாக உள்ளம் நிரம்பிய சோகம்  ததும்பும் காதலன் ராமுவாக ரசிகர்களை ஏமாற்றாமல் தன்னால் இயன்றதைச் செய்தார்  டி.ஆர்.ராமச்சந்திரன். அவருக்கு ஜோடி ஸ்ரீரஞ் சனி. பராசக்தி, ரத்தக்கண்ணீர், இல்லற ஜோதி என்று தமிழில் இயங்கிக்கொண்டிருந்தவர்.  ஆந்திரத்து ஸ்ரீரஞ்சனி ஜூனியர்தான் இங்கு வெறும் ஸ்ரீரஞ்சனி ஆனார். அவரை ராஜி  ஆக்கி இந்தப் படத்தில் கண் தெரியாத கண்மணி யாக உலவவிட்டார் கே.ஜே.மகாதேவன். ரஞ்சனிக்கு பார்வையிழந்த பூக்காரி வேடம்.

பூக்காரியின் மீது பரிவு கொண்டு, அதுவே காதலாகி, அவளுக்குக் கண்ணொளி கிடைக்கவேண்டும் என்பதற்காக அதற்குத் தேவையான ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்க தனக்குத் தெரியாத குத்துச்சண்டையில் கலந்து கொண்டு, எதிர்பாராமல் வென்று, கிடைத்த பணத்தையும் களவு கொடுத்து, பிறகு ஒரு  பணம் படைத்த குடிகாரரைச் சந்திக்க நேர்ந்து,  குடிபோதையில் அவரிடமிருந்து பெறும் பணத்தால் திருட்டுப் பட்டம் சுமந்து, சிறை செல்கிறான் நாயகன்.  எனினும் அவன் கொண்டுவந்து தந்த பணத்தால் பூக்காரிக்குக் கண் அறுவை சிகிச்சை நடந்து பார்வை கிடைக்கிறது. பார்வை  கிடைத்தபோது நாயகன் ராமுவைத் தேடு கிறாள். அவனோ சிறையில். நாட்கள் நகர்கின் றன. ஆதரவாக இருந்த ஒரு அத்தையும் மரண மடைய, குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக் காரன் அவளைத் தவறான எண்ணத்தோடு அணுக, தற்கொலைக்கு முயலும் அவளைத் தடுத்துக் காப்பாற்றுகிறாள் அவளுக்குக் கண் மருத்துவம் செய்து, கண்ணொளி தந்த மருத்துவரின் தாயார். 

மருத்துவர் வீட்டில் தஞ்சமடையும் அவள் மருத்துவமனையில் உதவிகள் செய்கிறாள். மருத்துவருக்கு அவள்மீது காதல் ஏற்பட, சந்தர்ப்ப சூழலின் காரணமாக அவரையே திரு மணம் செய்துகொள்கிறாள். தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்குத் தனது முன்னாள் காத லன் ராமுவின் பெயரையே சூட்டுகிறாள். சிறையிலிருந்து ராமு விடுதலை யடைந்தானா, தனது காதலி ராஜியைச் சந்தித்தானா, முடிவில் என்னதான் ஆனது என்பதை சாப்ளின் படத்தை அடிப்படையாகக் கொண்டும் தமிழில் சில மாற்றங்களோடும் சொல்லி நிறைவுற்றது படம். காதலர்கள் இணையாமல் வேறொரு வருக்கு நாயகி வாழ்க்கைப்படுவதை அந்நாளைய தமிழ் ரசிகர்கள் ஏற்கவில்லை. எனவே, படம் தோல்வியைச் சந்தித்தது. அனுமந்தராவ் இசையில் ஆர்.பாலசரஸ்வதி பாடிய ‘‘மல்லிகைப் பூ ஜாதி ரோஜா’’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.  எஸ்.வி.ரங்காராவ், ஜே.பி.சந்திரபாபு, டி.பி.ராஜலட்சுமி உள்ளிட்டோரும் நடித் திருந்தார்கள். தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் “ராஜி நா பிராணம்” - என்ற பெயரில் வெளிவந்து அங்கேயும் தோல்வியையே தழுவியது.

சார்லி சாப்ளின் எனும் மாகலைஞனின் எண்ணத்தில் உதித்த சிட்டி லைட்ஸ் கதையை ராஜி என் கண்மணி என்று அப்படியே தந்தது மட்டுமல்லாமல் இன்னும் பலவிதமாக உரு மாற்றம் செய்து வேறு வேறு சுவையில் சுட்டுச் சுட்டுத் தந்திருக்கிறார்கள் நம்சினிமாக்காரர்கள்.  உதாரணத்திற்கு ஒன்றுதான் நிரம்ப மாற்றங்களுடன் விஜய் - சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ‘‘துள்ளாத மனமும் துள்ளும்’’. இன்னொன்று பாலுமகேந்திராவின் சிறந்த படைப்பாகப் பேசப்படுகிற கமல் - ஸ்ரீதேவி நடிப்பில் உருவான “மூன்றாம் பிறை”. உணர்வெழுச்சியான காதலின் தவிப்பு மிக்க சோக முடிவில் அந்த சிட்டி லைட்சின்  இறுதிக் க்ளோஸ்அப் காட்சியில் சாப்ளினின் முகபாவங்கள் வழங்கிய உயிர்ப்பை அவரது கதையாடலைப் பயன்படுத்திக்கொண்டவர் களால் அதுபோல உருவாக்கவே இயலவில் லை. அதுதான் சாப்ளின் எனும் மாகலைஞ னின் அபாரமான தனித்துவக் கலை மேதைமை!