tamilnadu

img

மின் விளக்குகளால் ஒளிரும் பெரியகோயில்

தஞ்சாவூர், அக்.30-  தஞ்சாவூர் பெரியகோயிலில் ராஜராஜசோழனின் 1037-ஆவது சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது என சதயவிழாக்குழுத் தலைவர் து.செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் செய்தியாளர்களி டம் அவர் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.  நவ.2 காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கமும், பின்னர் மேடை நிகழ்ச்சிகளும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. பின்னர் மாலை திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி, கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு, பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளன. நவ.3 காலை கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல்,  திருமுறை திருவீதிவுலா, பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனி்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ராஜராஜசோழன் பெயரில் விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெறுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பெரிய கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. என்றார். அப்போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, கோயில் உதவி ஆணையர் கோ.கவிதா, சதயவிழாக்குழுத் துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா, உறுப்பினர் சி.இறைவன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.