tamilnadu

img

மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு 

திருச்சிராப்பள்ளி, ஜுன் 2-  கோடை விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே, மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.  இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.79 லட்சம் புத்தகங்கள், 1,33,928 சீருடைகள், 2,41,282 புத்தக பைகள் திங்களன்று வழங்கப்பட்டன.  இந்தாண்டு அங்கன்வாடி யிலிருந்து அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 8,500 மாணவர்கள் இணைந்துள்ளனர். அது 10 ஆயிரம் வரை செல்லும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட அதிகமாகி உள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இது வரை எந்த புகார்களும் வரவில்லை. அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி இடைநிற்றலை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கு வராத குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  புதுக்கோட்டையில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கல் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மேற்படி பொருட்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 92,446 மாணாக்கர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,10,159 மாணாக்கர்களுக்கும் என மொத்தம் 2,02,605 மாணாக்கர்களுக்கு, வண்ண கிரையான்ஸ், வண்ண பென்சில், காலணிகள், காலை உணவு திட்டம், அட்லஸ், பாடக்குறிப்பேடு, சீருடைகள், கால் ஏந்தி - (சூ) சாட்ஸ், பஸ் பாஸ், பாட புத்தகம், புத்தகப் பைகள், கணித உபகரணப்பெட்டி, சைக்கிள், கல்வி உதவித்தொகை, சத்துணவு உள்ளிட்ட 15 வகையான விலையில்லா கல்வி நலத்திட்டங்கள் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 39,287 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 1,799 குழந்தைகளுக்கு இணை சீருடைகள் வழங்கும் பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.  சாக்லேட் மாலை அணிவித்து குழந்தைகளை வரவேற்பு  பள்ளியின் தொடக்க நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்தும் சாக்லேட் மாலை அணிவித்தும், பலூன்கள் கொடுத்தும் புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் குழந்தைகளை வரவேற்றனர். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, இயக்குனர் ஆர்.சுகர்சன், துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தைகளை உற்சாகத்துடன் பள்ளிக்கு அழைத்துச் சென்றதை பெற்றோர்கள் நெகிழ்ந்து பாராட்டினர்.  மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா திங்களன்று நடைபெற்றது. பொறையார் அருகே உள்ள சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, சீருடை, காலணிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கு.இளங்கோ தலைமை வகித்தார், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, புனிதா, தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன், தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, சீருடை, காலணிகளை 151 மாணவர்களுக்கு வழங்கி பேசினார்.  சாரட் வண்டியில் அரசுப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளிகளிலும், ஒவ்வொரு விதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.  குறிப்பாக, கிராமப்புற அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராமத்தினர் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமாகவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிதாக திட்டங்களையும், பள்ளி திறந்தவுடன் மாணவர்களை வரவேற்பு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, வேலாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை புதிதாக பள்ளியில் சேர்ந்த 22 மாணவர்களை, சாரட் வண்டியில் கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, பள்ளிக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். பள்ளியில் ஏற்கனவே உள்ள பழைய மாணவர்கள் அவர்களை வரவேற்றனர். இதில், பள்ளி தலைமையாசிரியர் சங்கரபாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்கள் பாண்டிமீனா, கனிமொழி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குருசாமி கருப்பையா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சந்திரா,  துணைத்தலைவர் செல்வகுமாரி, இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர் கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பேராவூரணி வடகிழக்கு பள்ளி  இதேபோல், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்ந்த 24 மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஹாஜாமுகைதீன் தலைமையில், ராஜா, ராணி போல் தலையில் கிரீடம் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.  புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் நேரில் சென்று வாழ்த்தினார். அப்போது, கல்விப்புரவலர்கள், ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு தலைவர் நித்யா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பாபநாசம், தஞ்சாவூப் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள், குறிப்பேடுகள், புத்தகப் பை, சீருடை, காலணி, கிரையான்ஸ் அடங்கிய கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ், உதவி ஆசிரியை அமுதா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கேத்ரின் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதே போன்று, அய்யம் பேட்டையை அடுத்த மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உப  கரணங்கள் அடங்கியத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், அய்யம் பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.