tamilnadu

img

மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம்

மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 30-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். செல்லதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரண உதவி மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக அதை வழங்க வேண்டும் என தெரிவித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் ஆய்வாளர் வடிவேலு பிரபுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.  

நகைக்கடன் நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு

மேலும், விவசாய குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் என். செல்லத்துரை தலைமையில், புதிய நகைக் கடன் விதிகளின் மூலம் ஏழை, எளிய நடுத்தர, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும், ஒன்றிய அரசும், நிதித்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பி உள்ள புதிய நகை அடமானக் கடன் விதிகள் அடங்கிய சுற்றறிக்கையினை ரத்து செய்துவிட்டு, பழைய நகைக் கடன் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.