tamilnadu

விற்பனையகங்களில் உணவுப் பொருள்களை செய்தித்தாளில் வழங்க தடை: ஆட்சியர்

நெல்லை , மே 31உணவுப் பொருள்கள் விற்பனையகங்களில் செய்தித்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உணவு பதார்த்தங்களை பழைய செய்தித்தாள்களில் வைத்து பார்சல் செய்வது  இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.  உணவுப் பொருள்களை பழைய செய்தித்தாள்களில் வைத்து வழங்குவது,  சுற்றிக்கட்டுவது,  பேக்கிங் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. சுகாதாரமான முறையில் உணவைத் தயாரித்தாலும் கூட,  செய்தித்தாள்களில் வைத்து உணவை உண்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.  பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து,  எண்ணெய் பிழிந்து உண்பது சிறிதுசிறிதாக விஷத்தை உண்பதற்கு சமம். உணவுப் பொருள்களில் செய்தித்தாள்களில் உள்ள வண்ணம் மற்றும் வேதிப்பொருள்கள் சேர்வதன் மூலம் மிக தீவிரமான உடல்பாதிப்பையும் எதிர்மறைவான விளைவுகளையும் ஏற்படுத்தும்.   செய்தித்தாள், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் உணவுப்பொருள்களுடன் சேருவதால், வேதியியல் வினை மாற்றம் ஏற்பட்டு  அஜீரணக் கோளாறை உருவாக்குவதோடு, கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்தும்.  மேலும்மையில் உள்ள கனிம வேதிப்பொருள்களான அரைல் அமீன்கள்,நுரையீரல் மற்றும் சிறுநீர் பைபுற்றுநோய் போன்ற நோய்கள் வரகாரணமாகின்றன. வண்ணங்கள், தடிமனான எழுத்துக்கள் உருவாக்கமற்றும் விரைவாக உலர்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால்,  பென்ஸீன்,டொலியீன், கோபால்ட் போன்ற வேதி பொருள்கள் செய்திஅச்சகங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்செய்திதாள்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானவர்கள்,  குழந்தைகள்,  வளரினப் பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து புற்றுநோய் மற்றும் மனித உணவு மண்டலத்தில் கோளாறு போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  இதன் காரணமாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள்ஆணையகத்தால் செய்தித்தாள்கள் போன்றவற்றில் உணவுப் பொருள்களை பார்சல் செய்யவோ, எண்ணெய்யை பிழிந்து உண்ணவோ தடைவிதித்துள்ளது. எனவே, உணவுப்பொருள்கள் விற்பனை நிறுவனங்களில் செய்தித்தாள், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை  வழங்கவோ, பார்சல் செய்யவோ கூடாது.  இவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருள்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம்.உணவு வணிகர்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யும் பொருட்டு இனிப்பு மற்றும் அனைத்து உணவுப்பொருள்களையும்  பேக்கிங் செய்து நுகர்வோர்க்கு கொடுக்கும்போது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் உள்ள கொள்கலன்களையே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் ஐஎஸ்ஓ பேக்கிங் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  உணவு வணிகர்கள் அதன்படி, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவுப்பொருள்களை பார்சல் செய்து உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.