tamilnadu

img

4,967 நிவாரண முகாம்கள்: 17 மீட்புப் படை குழுக்கள்

சென்னை,நவ.30- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைந்தது மீட்புப் படை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் 8 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கண்காணிப்பு பணிகளுக்கு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

பாதுகாப்பு மையம்

மாநில அவசரகால செயற்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. மேலும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4,967 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் டிஎன் ஸ்மார்ட் செயலி மூலமாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்ல தடை

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கனமழை, புயல் உருவாவதால் மறுஉத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. கொட்டி தீர்த்த மழை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (நவ.29) 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேங்கி உள்ள நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ., கொளத்தூர், திரு.வி.க.நகர், பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூர், மலர் காலனியில் தலா 14, தலைஞாயிறு, ஆலந்தூர், சோழவரத்தில் தலா 13 செ.மீ. மழையும், அடையாறு, அண்ணா பல்கலை., மதுரவாயல், புழல் பகுதியில் தலா 12, கோடம்பாக்கம், முகலிவாக்கத்தில் தலா 11 செ மீ மழையும், நந்தனம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூரில் தலா 11, பெருங்குடி, தேனாம்பேட்டை, மீனம்பாக்கத்தில் தலா 10 செ மீ மழையும் பதிவாகியுள்ளது.

2 பேர் பலி

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருவர் உயிரிழந்திருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த இரு தினங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் குறிப்பாக கண்காணித்து, அங்குள்ள நீரை அகற்றிவிடவும், மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் உயர்சக்தி மின் மோட்டார்களை வைத்து நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தொடர்பில் இருக்கும்படி அறிவுறுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினரை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் முப்படைகளின் அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.