tamilnadu

img

பொங்கல் கொண்டாடுவாரா சிங்கிஸ்கான்? -கணேஷ்

என்னம்மா.. காலேஜ்ல பொங்கல் வெச்சாச்சா..
அடடே.. அங்கிள். கொஞ்சம் இருங்க. சரியாக் கேக்கல. வெளில வந்துர்றேன்.. அலோ... இப்போ சொல்லுங்க
பொங்கல் வெச்சாச்சான்னு கேட்டேன்..
வெச்சுட்டோம். சாப்பிட்டுட்டோம்.. புதுசா ஒண்ணும் நடந்துச்சு..
அதென்ன?
சல்மான்கான்தான் பொங்கல் வெச்சாரு..
சல்மான்கானா...?
அங்கிள்.. இது எங்க சீனியர் சல்மான்கான்.. ஒரு முஸ்லீமா இருந்தாலும் எல்லார் மாதிரி அவரும் பொங்கல் வெக்குறதுல முன்னாடி நின்னாரு..
பொங்கல் முஸ்லீம் பண்டிகை இல்லையே... தமிழர் திருநாள்தானே... எல்லாரும் கொண்டாடுவாங்க..
நல்லவேளை, சொன்னீங்க.. ஆனா, எங்க காலேஜ்ல இதுமாதிரி நிறையப் பேசுறாங்க.. சர்க்கார் படத்துல விஜய்ய ஏன் செங்கிஸ்கான்னு கொண்டாடனும்... ராஜேந்திர சோழன்னு சொல்லக்கூடாதானுலாம் சொன்னாங்க..
Monsterனுதான் அந்தப்படத்துல சொல்லுவாங்க.. அதாவது அரக்கன்.. அப்புடி சொல்லிட்டு ராஜேந்திர சோழன்னு சொன்னா விட்டு வைப்பாங்களா..
அப்போ செங்கிஸ்கான் அரக்கனா, அங்கிள்
அவர்தான் உலகத்துலயே தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட பெரிய பேரரசைக் கட்டியமைச்சவரு.. 
அப்புடினா, முஸ்லீம் அரசருக்குதான் இந்த சாதனை சொந்தமா?
யாரு முஸ்லீம் அரசர்..?
செங்கிஸ்கான்தான்..
கான்னு பேரு வெச்சா, முஸ்லீமாத்தான் இருக்கணுமா... அவரு டெங்கிரி மதத்தச் சேர்ந்தவரு. 
அப்புடி ஒரு மதமா..? 
ஆமா.. மங்கோலிய மொழில வானம்னு அர்த்தம். எல்லையற்ற நீல வானம்தான் தங்களுக்கு வாழ்க்கையக் கொடுத்ததா அந்த மக்கள் நம்புறாங்க..
வேற நாடுகள்லயும் இருக்கா?
இருக்கு... துருக்கி, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான்லலாம் இப்பவும் இதுக்கு.. ஐரோப்பிய நாடான ஹங்கேரில 10ஆம் நூற்றாண்டு வரைக்கும் டெங்கிரிதான் பெரிய மதம்..
மதம் இல்லாதவங்களும் இருப்பாங்களா, அங்கிள்.,
உலகம் முழுக்க சுமாரா 110 கோடிப்பேர் இருக்காங்க... அந்த எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது... 1986ல 84.5 விழுக்காடு பிரான்ஸ் நாட்டுக்காரங்க மதம் சார்ந்து இருந்தாங்க. இப்போ வெறும் 50 விழுக்காடு அளவுதான் இருக்காங்க.. செக். குடியரசுல 78.4 விழுக்காடு மக்கள் மதம் சாராதவங்க. இதுதான் உலகத்துலயே அதிக விழுக்காடு..
அங்கிள்.. செங்கிஸ்கான் மதவெறியர்னு சமூக ஊடகத்துல செய்தி வருதே..?
எல்லா மதத்துக்காரங்களும் உக்காந்து பேசுறதுக்கு, கலந்துரையாட, விவாதிக்க ஒரு அமைப்ப அவரு ஏற்படுத்திக் கொடுத்தாரு.. அரசோட மதம்னு எதையும் வெச்சுக்கல.. தன்னோட மதத்த யார் மேலயும் திணிக்கவும் இல்ல.. 
இப்போ இருந்தா நம்மளோட பொங்கலும் கொண்டாடிருப்பாரு.. அவரு எப்புடி அங்கிள், அவ்வளவு பெரிய பேரரசக் கட்டுனாரு..?
போர் உத்திகள்ல மாற்றங்களக் கொண்டு வந்தாரு... அந்தக் காலத்துல குதிரைப்படை பெரிசா வெச்சுருக்குறவஙகதான் பெரிய அரசர்... இவர்கிட்டயும் இருந்துச்சு.. ஆனா போர்ல சேதத்தக் குறைக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாரு... குதிரைய ஒரு கையால ஓட்டிக்கிட்டே மறு கைல கத்தி வீசுறது, ஈட்டி எறியுறது எல்லாம் பாத்தாரு... குதிரைய ரெண்டு கால்களால இயக்குறதுக்கு பயிற்சி குடுத்தாரு.. ரெண்டு வாள், ரெண்டு கத்தி, குதிரைல உக்காந்துகிட்டே அம்பு விடுறதுனு அவரோட படை பட்டையக் கிளப்புச்சு..
நல்ல உத்தியா இருக்கே... நாங்களும் நல்ல வேலைக்குப் போக தயாரிக்குறப்ப இப்புடி உத்தி வெச்சுக்கணுமோ..
சரிதான்... ஆனா அது நமக்குப் பொருத்தமா இருக்கணும்... அவர்கிட்ட குதிரைப்படை இருந்துச்சு.. புது உத்தியப் புகுத்துனாரு..
இவ்வளவு நாள் அம்பு விடுறதுன்னா அர்ஜூனன், ஏகலைவன்னு நினைவுக்கு வந்தாங்க.. இப்போ குதிரைல உக்காந்துருக்குற செங்கிஸ்கானும் நினைவுக்கு வருவாரு..
ஒரு படத்துல அலெக்சாண்டர் குதிரை பேர் கேட்டு களேபரம் பண்ணுவாங்கல்ல..
ஆமா, அங்கிள்... பியூசி ஃபேலஸ்தான் அந்தக் குதிரைக்குப் பேரு. இவரோடு குதிரைக்கு என்ன பேர்?
அதாட பேரு சிகி.. ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... செங்கிஸ்கானுக்கு மங்கோலிய உச்சரிப்பு சிங்கிஸ்கான்..
சரி.. அங்கிள்.. பொங்கல் விளையாட்டுப் போட்டிலாம் இருக்கு... வெக்குறேன்..