மதுரை:
மத்திய - மாநில அரசுகள் கரும்புக்கு நியாயமான விலை வழங்க மறுத்து வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் வேறுவிவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இரண்டு அரசுகளும் திட்டமிட்டு கரும்பு விவசாயத்தை அழித்து வருவதோடு விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைஇன்று வரை இயங்குவதற்கு முக்கியக்காரணம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், அலங்காநல்லூர் பகுதி கரும்பு விவசாயிகள் சங்கம்,கரும்பு மேம்பாட்டு சங்கம் ஆகியவைதான். கரும்பு விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆலைநிர்வாகம் மறுத்த போதெல்லாம் உண்ணாவிரதம், தர்ணா, காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி பணத்தை பெற்றுவந்தன. அதே நேரத்தில ஆலையையும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களையும் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன.இந்த நிலையில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குகரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு 2015-2016, 2016-2017-ஆம் ஆண்டுகளில் தரவேண்டிய பாக்கி ரூ.19 கோடியை (மாநில அரசின் பரிந்துரை விலை இன்றுவரை வழங்கவில்லை. இந்தாண்டு பயிரிட்ட விவசாயிகளுக்கு இன்னும்ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.
கரும்பு விவசாயத்தை ஒழிப்பது யார்?
கரும்பு விவசாயத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் மத்திய-மாநில அரசுகளே போட்டிபோட்டு ஒழித்து வருகின்றன. கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000வழங்கவேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அரசோ ரூ.2,750 தான்கொடுத்து வருகிறது.கரும்பு விவசாயம் குறித்து நம்மிடையே பேசிய தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி, “ ஆறு வருடங்களுக்கு முன்பு எட்டாயிரம் ஏக்கர் முதல் பயிரிடும் பரப்பு வரைகரும்பு பயிரிடப்பட்டு வந்தது. கடந்தாண்டு 1,500 ஏக்கர் பயிரிடப்பட் டது. இந்தாண்டு 1,155 ஏக்கரே பயிரிடப்பட்டுள்ளது. பன்னிரெண்டாயிரம் ஏக்கர் 1,155 ஏக்கராக குறைந்ததற்குக் காரணம் மத்திய-மாநில அரசுகள் தான். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கொடுத்த கரும்புக்கான பாக்கியை உடனடியாக வழங்கவில்லை. வெட்டுக் கூலி ஏக்கருக்கு ரூ.1,500-ஐ அரசுகளே வழங்க வேண்டும். அவற்றையும் வழங்குவதில்லை. வெட்டுக கூலி போக விவசாயிக்கு ஒன்றும் மிஞ்சாது. பாக்கியை முறையாக வழங்காததால் வங்கிகளில் கரும்புவிவசாயி என்றாலே கடன் இல்லை என்கிறார்கள்.
இந்தாண்டு இரண்டாம் போகம்,மூன்றாம் போகம் கரும்புகள் (கட்டைக்கரும்புகள்) விளைச்சல் இல்லை. கிட்டத்தட்ட 600 முதல் 800 ஏக்கர் கரும்பு விவசாயத்தை அலங்காநல்லூர் பகுதி விவசாயிகள் அழித்துவிட்டார்கள்.இந்தாண்டு கொரோனா வேறு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்களில்கரும்பு வெட்டும், கரும்புப் பதிவும்ஒரே சேர நடைபெறும். இந்தாண்டு கரும்பு ஆலோசகர்கள், கரும்புபெருக்க அதிகாரிகள் விவசாயிகளை நாடிச்சென்று கரும்பு பயிரிடஆலோசனை வழங்கவில்லை. ஏப்ரல், மே மாதங்களில் பொறுப்பிலிருந்த ஆலையின் தனி அதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டார்.மொத்தத்தில் கரும்புக்கு நியாயமான விலையை அரசு வழங்க மறுக்கிறது. இதனால் விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு மாறிவருகிறார்கள். கரும்பு விவசாயத்தையும், சர்க்கரை ஆலையையும் இரண்டு கண்களாக விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். ஆனால்,விவசாயிகளின் கண்ணைத்தான் மத்திய-மாநில அரசுகள் குத்துகின்றன.
தமிழக அரசின் துரோகம்
கடந்த 2018 ஆண்டு “மாநில அரசு பரிந்துரை விலை வழங்கவேண்டும்” என்ற சட்டத்தை சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் ரத்துசெய்துவிட்டது. இதனால் மத்தியஅரசின் விலை மட்டுமே கிடைக்கிறது, தமிழக அரசு செய்த மிகப் பெரிய துரோகமென்றே இதைக் கூறலாம்.வரும் காலங்களில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குகரும்பு வரத்தை அதிகப்படுத்தவேண்டும். இதில் பெரும் பங்கு தமிழக அரசிற்கே உள்ளது. கரும்புவிவசாய சங்கங்களும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யும். குறிப்பாக கரும்பு விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற கட்டுப்படியான ஆதார விலை (Fair Remunerative Price (FRP)வழங்கவேண்டும் என்றார்.இந்த பிரச்சனை குறித்து வேளாண் இணை இயக்குநர் விவேகாநந்தன் கூறுகையில், “ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.