tamilnadu

img

வெளிமாநில மாணவர்களை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை:
மருத்துவ மாணவர் கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்களை நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தேவைப்பட்டால் தமிழக இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் சான்றிதழ்களை தமிழக  அரசு சரிபார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. மதுரையைச்  சேர்ந்த  சோம்நாத்,  நேயா,  ஸ்ரீலயா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

அதில்,”தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இதில் 85சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே,தமிழக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் செயலர்  2019- 2020 ஆம்  ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். தமிழக இளங்கலை  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில்வெளிமாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக   மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில்  மருத்துவக் கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக்கூறியிருந்தனர்.இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது, அரசுத்தரப்பில் முறையாக பரிசீலிக்கபட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி,  அது குறித்த விபரங்களை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது எனக் கூறியதால் 126 பேரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர்.  இந்த நிலையில் இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனு தாரர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். தேவைப்பட்டால் தமிழக இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு சரிபார்த்துக்கொள்ளலாம் என்றார். 

;