tamilnadu

img

மக்கள் தட்டுவது மார்க்சிஸ்ட் கட்சியின் கதவுகளைத் தான்!

நூற்றாண்டைக் கடந்த மாபெரும் கட்சி என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. 1920 ஆம் ஆண்டு விதை போட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. எம்.என். ராய் போன்ற தலைவர்கள் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு அடித்தளம் இட்டனர். நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் வரலாம். பலரும் கட்சி தொடங்கலாம். அது போன்ற கட்சிகளில் பல பிரபலங்கள் பிரவேசிக்கலாம். ஆனால், மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், முதலில் எந்தக் கட்சி அலுவலகம் அல்லது எந்தக் கட்சியின் தலைவர்கள்,  தொண்டர்களின் கதவுகளை தட்டுகிறார்கள் என்றால் நாட்டுக்கே தெரியும், அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கதவுகளைத்தான். நாம் கடந்து வந்த பாதை என்பதே வீரஞ்செறிந்த எண்ணற்ற போராட்டங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் போல் மாநாடு நடத்துகிற கட்சி அல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மக்களிடம் பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது, இந்த மாநாடு முடிந்தவுடன் அகில இந்திய மாநாட்டு பணி நமக்கு காத்துக்கொண்டிருக்கிறது. நமது கட்சியின் அகில இந்திய மாநாடு 1972இல் நடந்த போது தான், அன்றைய ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதை முன்கூட்டியே நாட்டு மக்களுக்கு அறிவித்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. நாம் பின்பற்றும் மார்க்சியத் தத்துவம் தான் அனைத்திலும் சிறந்தது. அப்படிப்பட்ட விவாதங்களை நம்முடைய மாநாடுகளில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  மாநில மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய பொறுப்பு விழுப்புரம் மாவட்டக் குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். சுவர் எழுத்து என்பது கம்யூனிஸ்டுகளின் பிரச்சார பாணி. விழுப்புரம் மாவட்டத்தில் சுவர் விளம்பரம் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு மாவட்ட முழுவதும் மாநாட்டு விளம்பரங்கள் சென்று சேர வேண்டும். அத்தோடு திண்ணை பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் மூலம் கிராம மக்களை வீடு தோறும் சந்தித்து மாபெரும் இயக்கமாக மாற்றிட நமது தோழர்கள் பறக்கும் படையாக மாற வேண்டும். விழுப்புரத்தில் சிபிஎம் மாநில மாநாட்டை நடத்துகிறது என்ற செய்தியை தொடர்ந்து பறைசாற்ற வேண்டும். இந்த பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இந்த மாநாடு மூலம் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். விழுப்புரத்தில் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரையிலிருந்து...