ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மே 13- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை மாவட்டப் பொருளாளர் எம். முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வி.காமராஜ் வரவேற்றார். கோரிக்கைகளை முன்மொழிந்து, மாவட்டச் செயலாளர் டி.கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஆர். பன்னீர்செல்வம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், மாவட்டத் தலைவர் ஏ. அதிதூத மைக்கேல் ராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் எம். ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மின் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ஏ.தியாகராஜன் நன்றி கூறினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மின் துறையை பல கூறுகளாக்கி தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மோசமான முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசும், வாரியமும் பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஓய்வதியர்களுக்கு மின்வாரியமே உத்தரவாதத்துடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலத் துணைத் தலைவர் பஷீர், கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே. செல்வராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருநகர் வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் கண்ணையன், ஜம்புலிங்கம், தேவராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க கிளை பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.