tamilnadu

img

ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்: இன்று இறுதி சடங்கு

சென்னை,ஜூலை 22- மகள் ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் உத்தரவாதம் அளித்ததால், சனிக்கிழமை (ஜூன் 23)  மாலைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வழுப்பு படித்த மாணவி ஸ்ரீமதியின் மர ணத்தில் மர்மம் நீடித்து வருவதால், அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து வியாழனன்று (ஜூலை 21) இவ்வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு, மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கு வெள்ளி யன்று (ஜூலை 22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மாணவி யின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்  முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.  அப்போது, அதை முழுமையாகப் படித்துப்பார்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்த தடயவியல் துறையில் இருந்து ஓய்வுபெற்ற நிபுணரான சாந்தகுமாரிடமும் நீதிபதி சில விளக்கங்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.

அதற்கு விளக்கம் அளித்த சாந்த குமார், அரசு மருத்துவர்களால் இரண்டு முறையும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இரண்டு முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டா வது முறை உடற்கூராய்வு செய்தபோது, புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரர் தரப்பிடம், “மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை ஏற்ப டுத்துகிறீர்கள். இதற்கு, அமைதியான தீர்வு காண வேண்டும். மகளின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள்என பெற்றோரை பார்த்து கேட்டார்.  

ஜிப்மர் மருத்துவர்கள்

அதன்பின்னர் உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டார். அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஜிப்மர் தரப்பிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டார். பின்னர், மனுதாரர் தரப்பிடம் நீதிபதி, “மாணவி இறந்து 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப்  பெற்றுக்கொள்கிறீர்கள்” என்று கேள்வி  எழுப்பியதுடன், உடலைப் பெற்று  கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கை நடத்தும்படி கூறினார். மகளின் உடலை சனிக்கிழமையன்று (ஜூலை 23) நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிச்சடங்குகளை நடத்தலாம் என்றார். இதையடுத்து  ஸ்ரீமதி உடலை சனிக் கிழமை (ஜூன் 23) பெற்றுக்கொள்வதாக பெற்றோர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.