tamilnadu

img

காணொலிப் பேட்டின்னு சொல்லுங்க.. பேசறேன்..!

நிருபர்:  “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” ஒன்று தொடங்கப் போவதாகவும் அதில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தும் 37 தலைவர்களுக்கு நீங்க கடிதம் எழுதியிருக்கிறதாப் படிச்சேன். பாராட்டுகள்.முதல்வர் ஸ்டாலின்:  நன்றி
நிருபர்:  மத்தவங்களுக்கு அழைப்பு விடுத்தது சரி.. ஓபிஎஸ் அண்ணனுக்கும் அழைப்பு விடுத்து அவரை மாட்டிவிடப் பாக்கறீங்களே..?
ஸ்டாலின்: அப்படியெல்லாம் இல்லியே.. அவரும் கூட்டமைப்பில சேரணும்னுதான் நினைக்கிறேன்.
நிருபர்:  உங்க கூட்டத்துக்கு வந்தா  ரெய்டு விடப்போறேன்னு  அமித் ஷா  மிரட்டுவாரு.. சேரலைன்னா அண்ணா திமுக சமூக நீதிக்கு எதிரானதுன்னு எல்லாரும் சொல்வீங்க.. அவர் எந்தப் பக்கம் போவார் பாவம்.. உங்க கூட்டத்துக்கு வந்திட்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்ய வேண்டிய நெருக்கடியில அவரைத் தள்ளிவிடறீங்களா இல்லியா…
ஸ்டாலின்:  நீங்களே நெருக்கடியில இருந்து தப்பிக்கிற வழியையும் அவருக்கு சொல்லிக் குடுத்துடுவீங்க போலருக்கே… (சிரிக்கிறார்)
   


அடுத்து நிருபர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்திக்கிறார்
நிருபர்: தஞ்சாவூர் மாணவி லாவண்யா…
அண்ணாமலை (இடைமறித்து) : தமிழகத்தில மதமாற்றம் நடந்தா கையைக் கட்டிக்கிட்டு சும்மா உட்கார்ந்திருப்பமா..? அதை ஊதிப் பெரிதாக்கி அகில பாரதப் பிரச்சனையாக்கலைன்னா நான் தலைவரா இருந்து என்ன பிரயோசனம்? தில்லியிலிருந்து தகவல் அறியும் குழுவை வரவழைப்போம். இங்கே மதசகிப்பின்மை பலூன் வெடிக்கணும்.. நாங்க இன்னும் சில மாவட்டங்கள்ல பரவணும்.. இதை செஞ்சு முடிச்சாத்தான் நான் என் தலைவர் போஸ்டைக் காப்பாத்திக்க முடியும். நாங்க 17 மாநிலங்கள்ல ஆட்சியில இருக்கோம்.. அடுத்து வர்ர ஐந்து மாநிலத் தேர்தல்கள்ல..
நிருபர்:  எனக்கு பல கேள்ளிகள் இருக்கு. ஆனா நீங்க நான் சொல்றதைக் கேக்கவே தயாரா இல்லே. அப்ப நான் வரேன்.. (கிளம்புகிறார்)

 

அடுத்து எச்.ராஜா...
நிருபரைப் பார்த்ததும் ராஜா :  பெகாசஸ் பத்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில வந்திருக்கறதைக் கேக்கப் போறீங்க.. நாட்டை ஆள்பவர்கள் நாங்க.. அடுத்தவங்க பேசறதை ஒட்டுக் கேக்கற உரிமையை எங்களுக்கு அரசியல் சட்டம் குடுத்திருக்கு.. நியூயார்க் டைம்ஸ்க்கு வேற வேலை இல்லை.. உங்களுக்கும் வேற வேலை இல்லை. யு ஆர் ஆல் ஆன்ட்டி இன்டியன்ஸ்.. நான் உங்க கூடல்லாம் பேசத் தயாரா இல்லே.. நீங்க போகலாம்…

அடுத்து நிதியமைச்சர் நிர்மலா
சீத்தாராமனைச் சந்திக்கக் கிளம்புகிறார் நிருபர்
நிருபர்: பட்ஜெட் ஆய்வறிக்கை குடுத்துட்டீங்க.. பட்ஜெட் குடுத்துட்டீங்க.. உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்தத் தடவை ஏன் அல்வா கிண்டலை? 
நிதியமைச்சர் : பட்ஜெட்ல மக்களுக்கு அல்வா கொடுக்கப் போறாங்கன்னு நீங்க கிண்டல் பண்ணாம இருக்கணுமேன்னுதான்.. 
நிருபர்: கடந்த ஏழு வருஷமா நீங்க பண்றதை மக்களுக்குப் புரியறமாதிரி எடுத்துச் சொல்றோம். அவ்வளவுதான்! அள்ளிஅள்ளிக் குடுக்கற எல்ஐசியை எந்த அரசாவது தனியார்கிட்ட விக்குமா? விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே எல்லாத்தையும் வித்துக்கிட்டே போறீங்களே.. இதுக்கு முடிவுதான் என்ன?
நிதியமைச்சர் : குடுக்கலைன்னா எங்க கார்ப்பரேட் நண்பர்கள் விடமாட்டேங்கறாங்களே?
நிருபர்:  அவங்களுக்கு சலுகை மேல சலுகையாக் குடுக்கறீங்க..சரி! எங்க மேல ஏன் ஜிஎஸ்டி வரியாப் போட்டுத் தள்றீங்க? பெட்ரோல், டீசல் விலையை ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிஞ்சவுடனே ஏத்த ஆரமிச்சுருவீங்க.. சாலை வரி, டோல்கேட்ல சார்ஜ்னு நாங்க படற பாட்டை எங்க போய்ச் சொல்றது.. அடுத்து நாங்க ரோட்டில நடந்து போனாலே 10 அடி நடந்தா 10 ரூபாய்னு ஜிஎஸ்டி வரி போட்டுருவீங்க போலருக்கே?
நிதியமைச்சர் : அருமை.. நல்ல யோசனையாச் சொல்லியிருக்கீங்க.. மோடிஜீக்குச் சொல்றேன்..
அதிர்ந்துபோன நிருபர் இடத்தைக் காலி செய்கிறார்.

 

அடுத்து அமித் ஷா...
நிருபர்: ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டுனு சொல்றீங்களே.. ஏன் ஒரே ஜாதின்னு சொல்ல மாட்டேங்கறீங்க?
அமித் ஷா: அடி மடியிலேயே கை வைக்கறீங்களே..? இவ்வளவு ஜாதி, மதம், மொழியெல்லாம் இல்லைன்னா எங்க பொழைப்பு என்ன ஆறது?
நிருபர்:  ஐந்து மாநிலத் தேர்தல்கள்ல ஜெயிச்சுடுவோம்னு நம்பிக்கை இருக்கா?
அமித் ஷா:  ரிக்சாக்காரங்க உட்பட எல்லார் கால்லேயும் விழுந்து ஓட்டுக் கேட்டுக்கிட்டிருக்கோம். ஜெயிச்சா நல்லது.. ஜெயிக்கலேன்னா எம்எல்ஏக்களை ஏலத்தில எடுத்தாப் போச்சு.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?

 

அடுத்து தலைப்பாக் கட்டு கட்டி உலா வரும் பாரத நாட்டு மகாராஜா மோடிஜி..
நிருபரைப் பார்த்ததுமே மோடி:  நான் பேட்டி யாருக்கும் குடுக்கறதில்லேன்னு தெரியாமயா நிருபரா இருக்கீங்க? காணொலிப் பேட்டின்னு சொல்லுங்க.. பேசறேன். 
(நிருபர் காணொலிப் பேட்டி தயார் செய்கிறார்)
நீங்க கேள்வி எதுவும் கேட்க வேணாம். நான் சொல்றதை நோட்  பண்ணிக்கிட்டாப் போதும். யுடியூப்ல என்னை ஒரு கோடி பேர் ஃபாலோ பண்றாங்க.. இதைச் சொன்னவுடனே நீங்க கைதட்டியிருக்க வேண்டாமா?.. இப்ப நிர்மலாஜி சமர்ப்பிச்சிருக்கற பட்ஜெட் அடுத்த நூறு ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பட்ஜெட்.. 2047-லே புதிய இந்தியா பிறக்கப்போவுது.. இதுக்கெல்லாம் கைதட்டாம சும்மா பாத்துக்கிட்டிருந்தா எப்படி? 
சரி.. சரி.. பேட்டி முடிஞ்சுது. நீங்க போகலாம்.
-கற்பனை: ராஜகுரு