tamilnadu

img

ஒரே உரம் - விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு - கே.பி.பெருமாள்

ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே நாடு - ஒரே மொழி, ஒரே நாடு - ஒரே கொள்கை, ஒரே நாடு - ஒரே தேர்தல், ஒரே நாடு - ஒரே மதம், ஒரே நாடு - ஒரே கல்வி, ஒரே நாடு- ஒரே ரேசன்கார்டு, ஒரே நாடு- ஒரே காவல்துறை  சீருடை, ஒரே நாடு - ஒரே உரம், இப்படி ஏராளமான ஒரே என்ற ஒற்றை முழக்கத்தை தொடர்ந்து முழங்கி வருகிறார்கள். இதில் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை, ஒரே நாடு ஒரே கல்விக்கொள்கை, ஒரே நாடு ஒரே உரம் உள்ளிட்டவைகளை அமல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் துன்ப துயரங்களையோ அல்லது நாட்டு மக்களிடம் ஏற்படும் அச்சத்தை பற்றியோ ஒன்றிய பாஜக அரசு எந்தவித கவலையும் படாமல் தங்களுடைய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

பிஜேபி எனும் பெயர் வரும் வகையில்...

தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற “விவசாயிகள் சம்மேளனம் 2022” நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி “ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை  தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பெயர் “பிரதான் மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா” (பிஎம்பிஜேபி) என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டத்தில் பிஜேபி என்று வரக்கூடிய வகையில் திட்டத்தின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி),  மியூரப் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி) மற்றும் என்.பி.கே போன்றவைகளை உர நிறுவனங்கள் நாடு முழுவதும் “பாரத்” என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும்.  இந்த திட்டத்தை 2022 ஆகஸ்ட் 24ஆம் தேதி ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் அறிவித்தது. இதன்படி  அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனிமேல் பல்வேறு வகையான உரப்பொருட்கள் அதாவது பாரத் யூரியா, பாரத் டி.ஏ.பி, பாரத் எம்.ஓ.பி, பாரத் என்.பி.கே என்பது போன்ற பெயரில் விற்பனை செயயப்படும்.  இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியா விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது.  இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உணவு மானியத்திற்கு அடுத்ததாக, உரத்திற்கு தான் அரசு அதிகளவில் அதாவது சுமார் 2 லட்சம் கோடிக்கு மேல் மானியம் ஒதுக்குகிறது. டி.ஏ.பி, எம்.ஓ.பி போன்ற உரங்களுக்கு அரசு மானியம் கொடுத்ததாலும் அரசாங்கம் அதன் விலையை கட்டுப்படுத்துவதில்லை. உரநிறுவனங்கள்  நிர்ணயம் செய்யும் விலையில் தான் விற்பனை ஆகிறது. எனவே, மானியம் பெறும் உரங்கள் அனைத்தையும் ஒரே பெயரில் மாற்ற வேண்டுமென்று அரசு எண்ணுகிறது.  உர நிறுவனங்கள் பல விதமான பிராண்ட் பெயர்களை கொண்ட உரங்களை விற்பனை செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்லும் செலவில் அரசு மானியம் பெரியளவில் வீணாவதாக ஒன்றிய அரசு கருதுகிறது. இதனால் உரங்களின் சரக்கு கட்டணத்தை குறைப்பது மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தை கொண்டு வருவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட உரத்தை சந்தைகளில் வாங்க விவசாயிகள் யோசிக்க மாட்டார்கள். இனி பெயரளவில் உள்ள உரத்தை தேடமாட்டார்கள் என்பது அரசின் நம்பிக்கை. உரநிறுவனங்கள் தங்கள் பெயரை முன்னிறுத்தி ஒரு இடத்திலிருந்து தொலைதூரத்திற்கு உரங்களை கொண்டு செல்வது குறையும் என அரசாங்கம் கருதுகிறது. 

உர நிறுவனங்கள் எதிர்ப்பு

ஒன்றிய அரசின் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் “பாரத்” என்ற பொதுவான பெயரிலேயே உரத்தை விற்பனை செய்ய வேண்டும். உரமூட்டை பேக்கிங்கில் தங்களது நிறுவனத்தின் பெயரை எங்காவது ஓரிடத்தில் பிரிண்ட் செய்யலாம். மானிய உரம் பைகளில் “பிரதான் மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா” (பி.எம்.பி.ஜே.பி) என்று மிகப்பெரிய அளவில் பிரிண்ட் செய்திருக்க வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அக்டோபர் 2ஆம் தேதி முதல் புதிய சாக்கு மூட்டைகளை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே தயாரிப்பு செய்யப்பட்ட பைகளை டிசம்பர் 12ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உரத்தின் பையில் மூன்றில் இரண்டு பங்கு புதிய பிராண்ட் பெயர் மற்றும் பி.எம்.பி.ஜே.பி லோகோவாகவும், மூன்றில் ஒரு பங்கு உர நிறுவனங்களின் பெயர், லோகோ மற்றும் பல்வேறு விதிகள் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையால் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. மேலும் உர விற்பனை சந்தையில் தங்களது நிறுவன பிராண்டின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. பிரதமர் அறிவித்துள்ள திட்டத்திற்கு உரத்தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

மக்களின் எண்ணம்

கிராமத்தில் “பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என எண்ணும்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் உள்ளன. உரத்தின் பெயர் ஒரே மாதிரி இருந்தால் எல்லா உரங்களும் ஒன்றாகுமா என்கிற கேள்வி ஆட்சியாளர்களுக்கு ஏன் ஏற்படவில்லை? உரத்தின் தரத்தை ஒன்றாக மாற்றுவதால் அல்லது உரஉற்பத்தி மற்றும் இறக்குமதி முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் ஒரே மாதிரியாக உரம் கிடைக்க ஓரளவு வாய்ப்புள்ளது. எனவே, பெயர் மாற்றத்தால் எதுவும் மாறப்போவதில்லை. அதே போல் உரத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக வெறும் பெயரை மாற்றுவதால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. உரம் தரமானதாக இல்லை என்றால் யார் மீது புகார் செய்வது.

மோடி அரசு அறிவித்துள்ள திட்டப்படி அரசாங்கத்தை தான் புகார் செய்ய வேண்டும்.  ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு செய்ய வேண்டியது என்ன? பாஜக ஆட்சியில் தான் உரம் கிடைக்கவில்லை என்று நள்ளிரவில் வரிசையில் காத்திருந்த விவசாயிகள் இறந்த சம்பவம் நடந்தது. இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க பெயர் மாற்றம் அல்லது ஒரே பெயர் திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை. தட்டுப்பாடு இல்லாமல் எல்லா நேரங்களிலும் விவசாயிகளின் தேவைகளுக்கான உரங்கள் கிடைக்க வேண்டும். அதே போல் அரசு விலை நிர்ணயம் செய்வது அவசியம் தேவை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் இன்றைக்கு விலையை தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். தங்களுக்கு நெருக்கமான வசதி படைத்த பெரிய விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்கிறார்கள். சாதாரண ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில்லை.  எனவே, ஒன்றிய பாஜக அரசு ஒரே பெயரில் வருகிற வகையில் உள்ள திட்டம் விவசாயிகளுக்கு தேவையில்லை. விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கட்டுப்படியான விலையில் அனைத்து வகை உரங்களும் கிடைக்கச் செய்யும் நடவடிக்கையே தேவை. உரத்திற்கான மானியத்தை கம்பெனிகளுக்கு கொடுக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளும் பயன் அடைவார்கள். இதுவே இன்றைக்கு விவசாயிகளுக்கான தேவை.